எதிர்காலத்தில் 70 சதவீத தமிழக மக்கள் மது அருந்தும் நிலை உருவாகிவிடும்-ஜஜேகே தலைவர் பாரிவேந்தர்
மதுரை: தமிழகத்தில் மது விற்பனையை அதிகரிக்க நினைக்கிறது மாநில அரசு. இதனால் எதிர்காலத்தில் 70 சதவீத தமிழக மக்கள் மது அருந்தும் நிலை உருவாகிவிடும் என்று ஐஜேகே தலைவர் பாரிவேந்தர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து மதுரையில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
ஐஜேகே துவங்கி 2 ஆண்டுகள் ஆகிவிட்டது. துவங்கிய 8வது மாதத்தில் பொதுத்தேர்தலை சந்தித்தோம். அதனால் கட்சி வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுத்து கூட்டணியை தவிர்த்தோம்.
தமிழகத்தில் மது விற்பனையில் ரூ.21 ஆயிரம் கோடி வருவாயை அரசு எதிர்பார்க்கிறது. இது ரூ.40 ஆயிரம் கோடியாக உயரும் போது, தமிழகத்தில 70 சதவீதம் பேர் மது அருந்தும் நிலை உருவாகிவிடும். இலவசத்தை தவிர்த்தாலே மது வருவாய் தேவையில்லாமல் போகும்.
கல்வி நிறுவனம் நடத்தும் எனக்கு, அரசியல் தேவையில்லை. மோசமான அரசியல் சூழ்நிலையை வேடிக்கை பார்க்க மனமின்றி அரசியலுக்கு வந்தேன். தமிழகத்தில் ஜனநாயக முறைப்படி தேர்தல் நடைபெறுவதில்லை.
வாக்காளர்களுக்கு அரசியல்வாதிகள் பணம் கொடுத்து ஓட்டுகளைப் பெறுகின்றனர். இதனால் மக்களும் ஊழல்வாதிகளாக மாறும் சூழல் உள்ளது. தமிழகத்தில் அறிவிக்கும் திட்டங்களை, நடைமுறைப்படுத்துவது இல்லை. தனியார் ஊக்குவிப்பால் மும்பை, குஜராத் வளர்ச்சி பெற்றுள்ளது. அதேபோல தமிழகத்திலும் வளர்ச்சிக்கு தாராள தனியார்மயத்தை அனுமதிக்க வேண்டும்.
வடக்கிலிருந்து குடிபெயர்ந்தவர்கள் என்பதால், சிங்களர்களுக்கு ஆதரவாக மத்திய அரசு செயல்படுகிறது. பார்லிமென்ட் தேர்தலில் காங்கிரஸ் கட்சியை ஒரு போதும் ஆதரிக்க மாட்டோம். மாறாக பாஜகவை ஆதரிப்போம்.
காரணம் காங்கிரஸ் கட்சியோடு பாஜகவை ஒப்பிட்டு பார்த்தால், பாஜகவில் ஊழல் குறைவு என்றே கூற வேண்டும். பலரும் கூறுவது போல பாஜகவில் மதவாதம் துளியும் இல்லை என்றார்.












Click it and Unblock the Notifications