ராக்கெட் வெடியினால் நெல் குடோனில் தீவிபத்து-ரூ.20 லட்சம் நாசம்!
காரைக்குடி: காரைக்குடி பள்ளத்தூர் கோவில் திருவிழாவில், வாண வெடிகள் வெடித்த போது நெல் குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.20 லட்சம் பொருட்கள் நாசமானது.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே, புதுவயலை அடுத்த பள்ளத்தூரில் 100க்கும் மேற்பட்ட அரிசி ஆலைகள் உள்ளன. இந்த ஆலைகளுக்கு வெளி மாவட்டம் மற்றும் மாநிலங்களில் இருந்து வரும் வியாபாரிகள், நெல்லை கொள்முதல் செய்து சேமித்து வைப்பதற்காக புதுவயல் நெல்பேட்டையில் 50க்கும் மேற்பட்ட குடோன்கள் உள்ளன.
இந்த நிலையில் முருகப்ப செட்டியார் ஊரணியில் கோவில் விழாவுக்காக, வாண வெடிகள் வெடித்தனர். அப்போது அதில் ஒரு வெடி அருகில் இருந்த நெல் குடோனின் மேற்கூரையில் விழுந்து, தீப்பிடித்தது. அதன்பிறகு குடோனின் அருகில் உள்ள மாரிமுத்து, ஷாஜகான், ஆர்.ஆர்.கே. டிரேடர்ஸ், முருகேசன், அங்கமுத்து உட்பட ஒன்பது பேரின் கடைகளுக்கு தீப் பரவியது.
தீ விபத்து குறித்து காரைக்குடி தீயணைப்பு அலுவலகத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் காரைக்குடி தீயணைப்பு வாகனத்தில் தண்ணீர் இல்லாததால், திருப்பத்தூர் வாகனம் வரவழைக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் தீயை சுமார் 2 மணி நேரம் போராடி அணைத்தனர்.
இந்தத் தீ விபத்தில், 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள், ரொக்கப் பணம் உட்பட மொத்தம் ரூ.20 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் கருகியதாக கூறப்படுகின்றது.
இது குறித்து சாக்கோட்டை இன்ஸ்பெக்டர் சிவகுமார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றார்.












Click it and Unblock the Notifications