அதிகரித்து வரும் முதுகெலும்பில்லாத அரசியல்வாதிகள்... ஃபேஸ்புக்கில் மமதா காட்டம்
தமது ஃபேஸ்புக் பக்கத்தில் மமதா எழுதியுள்ளதாவது:
பண்டைக் காலம் முதல் இருந்து வரும் நற்பண்புகள், வீரம், சாதாரண மக்களுடன் தொடர்பு இவையெல்லாம் இந்தக் காலத்தில் காணக் கிடைப்பதில்லை. அரசியல் தலைவர்கள் என்று அறியப்படுபவர்கள் முதுகெலும்பு இல்லாதவர்களாக இருப்பது அதிகரித்து வருவதில் எனக்கு வியப்பில்லை. அவர்கள் சாதாரண மக்களுக்காகவும் உண்மைக்காகவும் போராடத் துணிவில்லாமல் கோழைகளாக உள்ளனர்.
மக்களின் தேவைகளை முன்னிறுத்துவதுதான் தலைவர்களின் கடமை. இளைய தலைமுறையினர் தற்காலத் தலைவர்கள் குறித்து அறிந்து கொள்ள வேண்டும். அச்சமற்ற மனதுடன் இளைஞர்கள் சாதாரண மக்களின் பிரச்னைகளுக்காகப் போராடும் வகையில் நம்மைப் பொதுவாழ்வில் அர்ப்பணித்துக் கொள்வோம் என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.
மமதா பானர்ஜி குறிப்பிட்டது யாரை? என்ற கேள்விதான் இப்பொழுது பிரதானமாக இருக்கிறது. சில நாட்களுக்கு முன்பு கொல்கத்தாவில் செய்தியாளர்களிடம் பேசுகையில் மேற்கு வங்க அரசை விமர்சித்த உள்துறை அமைச்சர் ப. சிதம்பரத்தைத்தான் அனேகமாக மமதா இப்படி சொல்லியிருக்கக் கூடும் என்ற யூகம் எழுந்துள்ளது.