உத்தரப்பிரதேச உள்ளாட்சித் தேர்தலில் பாஜக அதிரடி- 10 மாநகராட்சி மேயர் பதவிகளை கைப்பற்றியது

சமாஜ்வாதி கட்சி ஆட்சி நடைபெறும் உத்தரப்பிரதேசத்தில் 12 மாநகராட்சி மேயர் பதவிகளுக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் 10 மாநகராட்சி மேயர் பதவிகளை அள்ளிச் சென்றது. லக்னோ, மீரட், கான்பூர், ஆக்ரா, வாரணாசி, ஜான்சி, கோரக்பூர், அலிகார், மொரதாபாத், காஜியாபாத் ஆகியவை பாஜக வசமாயின.
மற்ற 2 இடங்களில் அலகாபாத் மாநகராட்சி மேயர் பதவியை பகுஜன் சமாஜ் கட்சி ஆதரவு பெற்ற சுயேச்சை வேட்பாளர் அபிலாஷா குப்தா கைப்பற்றி உள்ளார். இவர் மாநில முன்னாள் அமைச்சர் நந்த் கோபால் குப்தாவின் மனைவி ஆவார். பரேலி மேயர் பதவியை ஆளும் சமாஜ்வாடி கட்சி ஆதரவு பெற்ற சுயேச்சை வேட்பாளர் ஐ.எஸ். டோமர் கைப்பற்றி உள்ளார்.
சில மாதங்களுக்கு முன் நடந்த பேரவைத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றிய நிலையில், இப்போது மாநகராட்சி மேயர் தேர்தலில் அக்கட்சி ஆதரவு பெற்ற வேட்பாளர் ஒருவர் மட்டுமே வெற்றி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. காங்கிரஸ் கட்சிக்கு ஒரு இடம் கூட கிடைக்கவில்லை.












Click it and Unblock the Notifications