கோயில் நிலங்களை மீட்க அரசு அதிரடி திட்டம்: அமைச்சர் ஆனந்தன் தகவல்
நெல்லை: தமிழகத்தில் கோயில் நிலத்தை ஆக்கிரமித்துள்ளவர்களைக் கண்டறிந்து அவர்களிடம் இருந்து அந்த நிலங்களை மீட்க 3 டி.ஆர்.ஓ.க்கள், 7 தாசில்தார்கள், 14 நில அளவையர்கள் கொண்ட தனிப்பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது என்று இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் ஆனந்தன் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்ட அரசு கோயில்களின் செயல் அலுவலர்கள் மற்றும் அதிகாரிகளுடன் நெல்லையில் இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் ஆனந்தன் துறை ரீதியான ஆய்வு நடத்தினார்.
அப்போது அவர் கூறுகையில்,
தமிழகத்தில் கோயிலுக்கு சொந்தமாக 4.78 லட்சம் ஏக்கர் நிலங்கள் உள்ளது. இதில் கடந்த ஆண்டில் மட்டும் ரூ.300 கோடி மதிப்புள்ள 190 ஏக்கர் நிலங்கள் மீட்கப்பட்டு சம்பந்தப்பட்ட கோயில் நிர்வாகம் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மேலும் தமிழகத்தில் கோயில் நிலங்களை ஆக்கிரமித்துள்ளவர்களைக் கண்டறிந்து அவர்களிடம் இருந்து அந்த நிலங்களை மீட்க 3 டி.ஆர்.ஓ.க்கள், 7 தாசில்தார்கள், 14 நில அளவையர்கள் கொண்ட தனிப்பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது. அத்துடன் கோயில் நிலங்கள் குறித்த விவரம் ஆன்லைனில் வெளியிடப்பட உள்ளது. இதன் மூலம் எதிர்காலத்தில் அறநிலையத்துறைக்குச் சொந்தமான நிலங்களை யாரும் ஆக்கிரமிப்பு செய்ய முடியாது.
கோயிலுக்கு குத்தகை, வாடகை பாக்கி கொடுக்காதவர்களின் பெயர்களை அந்தந்த கோயில்கள் முன்பு பொது மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் தகவல் பலகையில் எழுதி வைக்கப்படும். தமிழகத்தில் இந்தாண்டு மேலும் 50 கோயில்களில் அன்னதான திட்டம் விரிவுபடுத்தப்படுகிறது. இதன் மூலம் மொத்தம் 516 கோயில்களில் அன்னதான திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.
அன்னதான திட்டத்திற்கு ஒவ்வொரு கோயிலிலும் அன்னதானம் வழங்க மண்டபம், அதில் டேபிள், சேர்கள், பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதி போன்ற தேவையான அனைத்து வசதிகளும் உருவாக்கித் தரப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications