சதானந்த மாற்றதுக்கு ஒக்கலிகா சமூகம் கடும் எதிர்ப்பு- நாளை "பெங்களூர்" பந்த் நடத்த அழைப்பு
பெங்களூர்: பெங்களூரில் சதானந்த கவுடாவை முதல்வர் பதவியில் இருந்து மாற்றியதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஒக்கலிகா சமுதாயத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஜெகதீஷ் ஷெட்டர் நாளை பதவியேற்கும் போது "பெங்களூர் பந்த்" நடத்தவும் அழைப்பு விடுத்துள்ளனர்.
கர்நாடக முதல்வராக இருந்த சதானந்த கவுடா, ஒக்கலிகா சமூகத்தைச் சேர்ந்தவர். அவர் மாற்றப்பட்டு லிங்காயத்து சமூகத்தைச் சேர்ந்த ஜெகதீஷ் ஷெட்டர் புதிய முதல்வராக பொறுப்பேற்க இருக்கிறார்.
கர்நாடக மாநிலத்தில் லிங்காயத்து மற்றும் ஒக்கலிகா சமூகத்தினர் பெரும்பான்மையினராவார். சதானந்த கவுடாவை மாற்றுவதற்கு ஒக்கலிகா சமூகத்திஅன்ர் கடும் எதிர்ப்புத் தெரிவித்திருந்தனர். இருப்பினும் வேறுவழியில்லாமல் சதானந்த கவுடாவை மாற்றியுள்ளனர்.
இதனால் பெங்களூரில் நேற்று ஒக்கலிகா சமுதாயத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்காக வி.வி.புரத்தில் நஞ்சவதோடா சுவாமி தலைமையில் நூற்றுக்கணக்கானவர்கள் குவிந்தனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து ஊர்வலமாக புறப்பட்டு, மினர்வா சர்க்கிள், ஜே.சி.ரோடு வழியாக டவுன்ஹாலை அடைந்தனர். ஊர்வலத்தில் எதியூரப்பாவுக்கு எதிராகவும், பாஜக மேலிடத்தைக் கண்டித்தும் முழக்கங்களை எழுப்பினர். இதில் ஆளும் கட்சி எம்.எல்.ஏக்களும் கலந்து கொண்டனர்.
இதேபோல், மாண்டியா மாவட்டம் சென்னபட்னா மற்றும் பல இடங்களில் ஒக்கலிகா சமூகத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பாஜக தலைவர்களின் உருவபொம்மைகள் எரிக்கப்பட்டன.
மேலும் ஜெகதீஷ் ஷெட்டர் நாளை முதல்வராக பதவியேற்கும்போது பெங்களூர் பந்த் நடத்தவும் ஒக்கலிகா சமூகத்தினர் அழைப்பு விடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications