பஸி முகம்மது சவூதி சிறையில் அடைபட்டுள்ளார், மீட்பது கஷ்டம்... மத்திய அரசு
டெல்லி: இந்தியன் முஜாஹிதீன் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவராக கருதப்படும் இந்தியாவைச் சேர்ந்த பஸி முகம்மது தற்போது சவூதி அரேபிய சிறையில் அடைபட்டுள்ளார் என்றும், அவரை மீட்பது மிகவும் கடினமான காரியம் என்றும் மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
அபு ஜிண்டாலைத் தொடர்ந்து இந்தியாவில் முக்கிய குண்டுவெடிப்புச் சம்பவங்களில் தொடர்புடைய பஸி முகம்மதுவை, சிபிஐ அதிகாரிகள் கைது செய்யவுள்ளதாகவும், அவரை இந்தியாவுக்குக் கொண்டு வரவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.
ஆனால் தனது கணவர் அப்பாவி. அவருக்கும், தீவிரவாத அமைப்புகளுக்கும் தொடர்பு கிடையாது. இந்திய அதிகாரிகள் மே 13ம் தேதி எனது கணவரை சவூதியில் அவர் தங்கியுள்ள இடத்தில் வைத்துக் கைது செய்துள்ளனர். அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும் என்று கோரி பஸியின் மனைவி நிக்கத் பர்வீன் உச்சநீதிமன்றத்தில் மனு செய்தார்.
இந்த மனுவை நீதிபதிகள் சதாசிவம், ரஞ்சன் கோகாய் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் நேற்று விசாரித்தது. அப்போது மத்திய அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் கெளரவ் பானர்ஜி கூறுகையில், சவூதி அரேபிய சிறையில் பஸி முகம்மது அடைக்கப்பட்டுள்ளார். அவரை இந்திய அதிகாரிகள் கைது செய்யவலி்லை. சவூதி அரேபிய போலீஸார்தான் அவரைக் கைது செய்துள்ளனர்.
அவரை மீட்டு கொண்டு வருவதற்கு பல்வேறு கடினமான நடைமுறைகளைக் கடைப்பிடித்தாக வேண்டும் என்று தெரிவித்தார். இதையடுத்து எழுத்துப்பூர்வமாக பதிலைத் தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் இன்னும் 2 வாரத்தில், பஸி குறித்த விரிவான விவரங்களைத் தாக்கல் செய்யுமாறும் கோர்ட் உத்தரவிட்டது.












Click it and Unblock the Notifications