ஒரேயடியாக குறைந்த பூக்கள் விலை: மல்லிகை ரூ.200ல் இருந்து ரூ.80 ஆக சரிவு
கோவில்பட்டி, சங்கரன்கோவில், நாலாட்டின்புதூர், முடுக்குமிட்டான்பட்டி, வில்லிசேரி், கழுகுமலை, வானரமுட்டி, மதுரை, மேலநீலிதநல்லூர், கடலையூர், காமநாயக்கன்பட்டி, ஈராச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ரோஜா, மல்லிகைப்பூ, சம்மங்கி, கனகாம்பரம், அரளிப்பூ, பிச்சிப்பூ, சேவல்பூ, கேந்தி உள்ளிட்ட பூக்களை விவசாயிகள் பயிரிட்டு வருகின்றனர்.
இப்பகுதி விவசாயிகளில் பலர் தாங்களாகவே பூ வகைகளை வேன் மற்றும் பஸ்கள் மூலமாக கோவில்பட்டி நகருக்கு கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர். தற்போது கோவில்பட்டியில் பூக்களின் விளைச்சல் அதிகரித்துள்ளதால் வரத்தும் அதிகரித்துள்ளது. இதனால் அவற்றின் விலை கடும் விழ்ச்சி அடைந்துள்ளது.
கோவில்பட்டியில் கடநத ஒரு வாரத்திற்கு முன்பு ஒரு கிலோ ரோஜாப்பூ ரூ.200க இருந்தது. தற்போது கிலோ ரூ.80க்கு விற்கப்படுகிறது. இதேபோல் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு ரூ.40க்கு விற்ற கேந்தி பூ தற்போது ரூ.30க்கும், ரூ.45க்கு விற்ற சேவல் பூ ரூ.20க்கும், ரூ.200க்கு விற்ற மல்லிகை ரூ.80க்கும் விற்பனையாகின்றன. இதே போன்று பல்வேறு பூக்களின் விலை ரூ.20லிருந்து 75 வரை குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.