2ஜி வழக்கு: சுப்பிரமணிய சாமியின் கோரிக்கையை நிராகரித்த உச்ச நீதிமன்றம்
டெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு தொடர்பான தீர்ப்பு குறித்து ஜனாதிபதி மூலம் விளக்கம் கோரும் மனுவை விசாரிக்காமல் திருப்பி அனுப்ப வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சாமியும் அன்னா ஹசாரே குழுவைச் சேர்ந்த பிரசாந்த் பூஷணும் கோரிக்கை விடுத்தனர். ஆனால், இந்தக் கோரிக்கையை நீதிபதிகள் நிராகரித்துவிட்டனர்.
இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு குறித்து ஜனாதிபதி மூலமாக மத்திய அரசு நீதிமன்றத்திடம் விளக்கம் கோரியுள்ளது. இந்த மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன பெஞ்ச் முன் நடந்து வருகிறது.
இந்த விசாரணையின்போது பொது நல வழக்கு மையத்தின் சார்பில் மூத்த வழக்குரைஞர்களான சோலி சோரப்ஜி, பிரசாந்த் பூஷண் ஆகியோர் ஆஜராகி வாதாடினர்.
அவர்கள் கூறுகையில், 122 ஸ்பெக்ட்ரம் உரிமங்களை உச்ச நீதிமன்றம் பிப்ரவரி 2ம் தேதி ரத்து செய்துவிட்டது. அதன் பிறகும் அந்தத் தீர்ப்பில் விளக்கம் கோர முயலுவதன் மூலம் மத்திய அரசு தனது மேலாதிக்கத்தை ஜனாதிபதி மூலம் காட்ட நினைக்கிறது. இதன்மூலம் வழக்கைத் திசை திருப்பவும் மத்திய அரசு முயல்கிறது.
ஸ்பெக்ட்ரம் விஷயத்தில் தெளிவற்ற, தன்னிச்சையான முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதனால், குறிப்பிட்ட சில தனியார் நிறுவனங்களுக்கு மிகவும் மலிவான விலையில் ஸ்பெக்ட்ரம் வழங்குவதற்கு அரசு சாதகமாக உள்ளதோ என்று எண்ணத் தோன்றுகிறது என்றனர்.
இதையடுத்து இந்த வழக்கில் இன்னொரு மனுதாரரான சுப்பிரமணிய சாமி வாதாடுகையில், ஒரு வழக்கில் உச்ச நீதிமன்றமே தீர்ப்பளித்த பிறகு அதில் மத்திய அரசு கேள்வி கேட்க நினைப்பது அரசின் மேலாதிக்கப் போக்கையே காட்டுகிறது. இந்த விவகாரத்தில் பிப்ரவரி 2ம் தேதி வழங்கப்பட்ட தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி சென்ற ஏப்ரல் மாதம் தாக்கல் செய்த மனுவை, அரசு அப்போதே திரும்பப் பெற்றுக் கொண்டது.
இதனால், இந்த வழக்கில் தனது குறைகளை முறையிட இருந்த வாய்ப்பை அரசு இழந்து விட்டது. ஆனாலும் ஜனாதிபதி மூலம் விளக்கம் கேட்கும் மனுவைத் தாக்கல் செய்து தீர்ப்பில் திருத்தம் செய்ய வைக்க அரசு முயல்கிறது.
இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜி.எஸ். சிங்வி, ஏ.கே. கங்குலி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் அளித்த தீர்ப்பை உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன பெஞ்ச் உறுதிப்படுத்தத் தவறினால், 2ஜி வழக்கு பலவீனமாகிவிடும். அதன்மூலம் சி.பி.ஐ. நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் ஒவ்வொருவராக விடுதலை செய்யப்படும் நிலை உருவாகிவிடும்.
சிக்கலான கேள்விகளைக் கேட்டு சி.பி.ஐ. நீதிமன்றத்தில் 2ஜி வழக்கு விசாரணையைத் தாமதப்படுத்த மத்திய அரசு முயலுகிறது. ஏற்கெனவே, 2ஜி ஸ்பெக்ட்ரம் ஏலம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் அளித்த கெடுவைப் பின்பற்றாமல் மத்திய அரசு கால நீட்டிப்பு கோரியது. அதை ஏற்று உச்ச நீதிமன்றமும் ஆகஸ்ட் 31-ம் தேதி வரை நீட்டிப்பு வழங்கியுள்ளது. ஆனால், இதுவரை 2ஜி ஸ்பெக்ட்ரத்தை ஏலத்தில் விடுவதற்கான நடைமுறையை அரசு மேற்கொள்ளவில்லை.
இயற்கை வளங்களை ஏலத்தில் விட வேண்டுமா என்ற அரசின் சந்தேகத்துக்கு 2ஜி வழக்கு விசாரணை முடிந்து தீர்ப்பு வந்த பிறகு, மத்திய அரசு விளக்கம் கேட்கலாம். இதனால் இப்போதைய சூழலில் ஜனாதிபதி மூலம் மத்திய அரசு கோரும் சந்தேகங்கள் தொடர்பான மனுவை மேற்கொண்டு விசாரிக்கக் கூடாது என்றார் சாமி.
ஆனால், இந்த விவகாரத்தில் தவறான நோக்கத்துடனும் திசை திருப்பும் வகையிலும் மத்திய அரசு மனு தாக்கல் செய்துள்ளதாகக் கூறுவதை ஏற்க முடியாது என்று கூறி சாமியின் கோரிக்கையை தலைமை நீதிபதி எஸ்.எச். கபாடியா தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன பெஞ்ச் நிராகரித்துவிட்டது.












Click it and Unblock the Notifications