தடகள வீராங்கனை பிங்கி பிராமனிக் நிலமோசடியில் ஈடுபட்டுள்ளார்-மேற்கு வங்க அரசு குற்றச்சாட்டு
கொல்கத்தா பாலியல் பலாத்கார வழக்கில் சிக்கிய இந்திய தடகள வீராங்கனை பிங்கி பிராமனிக் தற்போது நிலமோசடியில் ஈடுபட்டதாக மேற்கு வங்க மாநில அரசு குற்றச்சாட்டி உள்ளது.
இந்திய தடகள வீராங்கனை பிங்கி பிராமனிக். ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற இவர், சமீபகாலமாக அடுத்தடுத்து வழக்குகளில் சிக்கி வருகிறார். கடந்த மாதம் பிங்கியுடன் தங்கி இருந்த பெண் ஒருவர், தன்னை பிங்கி பல முறை பாலியல் பலாத்காரம்செய்துவிட்டதாகவும், அவர் ஒரு ஆண் என்றும் பரபரப்பு புகார் அளித்தார்.
இந்த வழக்கில் போலீசாரால் கைது செய்யப்பட்ட பிங்கிக்கு, பாலியல் சோதனை செய்ய நீதிமன்றம் உத்தரவிடப்பட்டது. பிங்கிக்கு நடைபெற்ற மருத்துவ பரிசோதனையின் வீடியோ இணையதளத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை கிளப்பியது.
இந்த நிலையில் 26 நாட்களுக்கு பிறகு நேற்று பிங்கி, நீதிமன்ற காவலில் இருந்து விடுவிக்கப்பட்டார். தற்போது அவர் மீது மேற்கு வங்க விளையாட்டு அமைச்சர் ஒரு புதிய குற்றச்சாட்டை கிளப்பி உள்ளார்.
இது குறித்து மேற்கு வங்க மாநில விளையாட்டு அமைச்சர் மதன் மித்ரா கூறியதாவது,
ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்றதை பாராட்டி, பிங்கிக்கு மாநில அரசு மூலம் இலவசமாக பிளாட் கொடுக்கப்பட்டது. அந்த பிளாட் அவரது பயன்பாட்டிற்காக வழங்கப்பட்டது. ஆனால் ஆதாயம் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் அவர் அதை விற்பனை செய்துள்ளார். இது ஒரு சட்ட விரோதமான நடவடிக்கை ஆகும்.
பிங்கிக்கு அளிக்கப்பட்ட இடத்தில் தற்போது 5 மாடிகளை கொண்ட வீடு கட்டப்பட்டு வருகிறது. தற்போது அந்த இடத்தின் உரிமையாளர் யார் என்பதை கொல்கத்தா மாநகராட்சி அலுவலகத்தை தொடர்பு கொண்டால் அறிந்து கொள்ளலாம் என்றார்.
இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள பிங்கி, நான் அந்த இடத்தை விற்கவில்லை. ஒரு வீடு அங்கு கட்டப்பட்டு வருகிறது என்றார்.
இது குறித்து பிங்கி உடன் வாழ்ந்து வந்த பெண் கூறியதாவது,
பிங்கியும், முன்னாள் தடகள வீரர் அவதார் சிங்கும் சேர்ந்து மாநில அரசு இலவசமாக கொடுத்த பிளாட்டை விற்றுவிட்டனர். இதன் மூலம் கிடைத்த பணத்தில் புறநகரில் ஒரு பிளாட், ஒரு சொகுசு கார் ஆகியவற்றை பிங்கி வாங்கினார். எனக்கும் இந்த நில விற்பனைக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றார்.
பாலியல் பலாத்கார வழக்கில் சிக்கி தவித்த பிங்கி, தற்போது நிலமோசடி வழக்கில் சிக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications