துணை ஜனாதிபதி பதவிக்கு காங்கிரஸ்காரர் கூடாது: பிரகாஷ் காரத் போர்க்கொடி
டெல்லி: துணை குடியரசுத் தலைவர் பதவிக்கு காங்கிரஸ் அல்லாதவரைத் தான் வேட்பாளராக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் தெரிவித்துள்ளார்.
துணை குடியரசுத் தலைவர் தேர்தலில் தற்போதைய துணை குடியரசுத் தலைவர் ஹமீது அன்சாரியையே நிறுத்த காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே துணை குடியரசுத் தலைவர் தேர்தல் வேட்பாளரைத் தேர்வு செய்வது குறித்து பிரதமர் மன்மோகன் சிங் அரசியல் கட்சிகளைத் தொடர்பு கொண்டார்.
அப்படி அவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத்தை தொடர்பு கொண்டபோது அவர் துணை குடியரசுத் தலைவர் வேட்பாளர் காங்கிரஸ் அல்லாதவராக இருக்க வேண்டும் என்று பிரதமரிடம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பிரகாஷ் காரத் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
காங்கிரஸ் அல்லாத ஒருவர் தான் துணை குடியரசுத் தலைவராக வேண்டும் என்று நாங்கள் பிரதமரிடம் தெரிவித்துள்ளோம். இனி காங்கிரஸ் தான் முடிவு எடுக்க வேண்டும். குடியரசுத் தலைவர் பதவிக்கு போட்டியிடுபவருக்கு என்று ஒரு அந்தஸ்தும், மதிப்பான பின்னணியும் இருக்க வேண்டும் என்றார்.
ஏற்கனவே ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருக்கும் திரிணாமூல் காங்கிரஸ் தலைவர் மமதா பானர்ஜி ஹமீது அன்சாரிக்கு ஆதரவு தெரிவிக்க மறுத்துள்ளார். இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் அன்சாரியை ஆதரிக்க மறுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே பிரதமர் மன்மோகன் சிங் திரிணாமூல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மமதா பானர்ஜியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதாக திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி. குணால் கோஷ் தெரிவித்தார். வரும் 14ம் தேதி டெல்லியில் நடக்கும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு பிரதமர் விடுத்த அழைப்பை ஏற்று மமதா தனது கட்சியைச் சேர்ந்த மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் முகல் ராயை கூட்டத்திற்கு அனுப்பி வைக்கிறார் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
ஐக்கிய முற்போக்கு கூட்டணி கூட்டத்தில் நீண்ட நாட்கள் கழித்து திரிணாமூல் காங்கிரஸ் கலந்து கொள்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications