சுட்டுக் கொன்று விடுவேன்... ஒபாமா மனைவிக்கு மிரட்டல்!
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் மனைவி மிஷலுக்கு ஒரு போலீஸ்காரர் கொலை மிரட்டல் விடுத்திருப்பது அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
வாஷிங்டன் போஸ்ட் பத்திரிக்கையில் ஒரு செய்தி வெளியாகியுள்ளது. அதில், வாஷிங்டன் காவல்துறையைச் சேர்ந்த மோட்டார் சைக்கிள் பாதுகாப்புப் படைப் பிரிவைச் சேர்ந்த ஒரு போலீஸ்காரர், தான் மிஷல் ஒபாமாவை சுட்டுக் கொல்லப் போவதாக ஒரு சக காவலரிடம் கூறியுள்ளார். மேலும் தனது செல்போனில் இருந்த ஒரு துப்பாக்கிப் படத்தைக் காட்டி இதைக் கொண்டுதான் தான் சுடப் போவதாகவும் கூறியுள்ளார்.
இதையடுத்து சம்பந்தப்பட்ட காவலரை, பாதுகாப்புப் பிரிவிலிருந்து மாற்றி நிர்வாகப் பிரிவுக்கு இடமாற்றம் செய்துள்ளனர். மேலும் அந்தக் காவலர் மீது விசாரணை நடத்தவும் ரகசியப் போலீஸாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து ரகசியப் போலீஸ் பிரிவு செய்தித் தொடர்பாளர் எட்வின் டோனோவன் கூறுகையில், மிஷல் ஒபாமாவுக்கு கொலை மிரட்டல் விடுத்தது தொடர்பாக ஒரு காவலரிடம் விசாரணை நடந்து வருகிறது. தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார்.
இந்த விவகாரம் குறித்து மிஷல் ஒபாமாவின் அலுவலகம் எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை. சம்பந்தப்பட்ட காவலர் குறித்த விவரங்களும் வெளியிடப்படவில்லை.












Click it and Unblock the Notifications