தனி ஈழம் கோரி கருணாநிதி தீர்மானம் கொண்டு வந்தால் அவருடன் போராட தயார்: தா.பாண்டியன்

நிருபர்களிடம் அவர் பேசுகையில், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய குழு கூட்டம் ஆகஸ்டு 18 முதல் 21ம் தேதி வரை டெல்லியில் நடக்கிறது. இந்தியாவில் சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீடை அனுமதிக்க வேண்டும் என் அமெரிக்கா அதிபர் ஒபாமா பேசியிருப்பதற்கு கண்டிக்கத்தக்கது.
இலங்கை ராணுவத்துக்கு இந்தியாவில் பயிற்சி கொடுப்பதை ஏற்கனவே தமிழ்நாட்டில் அனைத்து கட்சிகளும் எதிர்த்து வருகின்றன. ஆனாலும் மறுபடியும் மத்திய அரசு இங்கு பயிற்சி கொடுக்க அனுமதிக்கிறது. இது தமிழர்களை அவமானப்படுத்தும் செயலாகும்.
இப்போது இலங்கை ராணுவ வீரர்களுக்கு குன்னூரில் பயிற்சி கொடுக்க ஏற்பாடு நடப்பதாக அறிகிறோம். மத்தியில் ராஜபக்சேவுக்கு ஆதரவு தருகிற அரசு இருக்கும் வரை இது தொடரும். எனவே இப்போதைய காங்கிரஸ் கூட்டணி அரசு அகற்றப்பட்டால் தான் இதற்கு தீர்வு கிடைக்கும்.
இலங்கையுடனான இந்திய உறவை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். சென்னையில் டெசோ மாநாடு நடத்தப்போவதாக திமுக தலைவர் கருணாநிதி அறிவித்திருக்கிறார். இதுபற்றி கருணாநிதியை சந்தித்த ப.சிதம்பரம் டெசோ மாநாட்டை நடத்துங்கள். ஆனால் தனி ஈழம் பற்றி தீர்மானம் நிறைவேற்றக்கூடாது என்று சொன்னதாக தகவல் வருகிறது.
எனவே டெசோ மாநாட்டில் இலங்கையில் தனி ஈழம் கிடைக்க கருணாநிதி தீர்மானம் கொண்டு வந்து போர்க்கொடி உயர்த்தினால் நாங்களும் அவருடன் போராட தயாராக இருக்கிறோம்.
கொலை வழக்கில் தளி தொகுதி இந்திய கம்யூனிஸ்டு எம்.எல்.ஏ. ராமச்சந்திரனை போலீசார் தேடுகிறார்கள். உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிப்பதில் விசாரணை செய்வதில் நாங்கள் எந்த தலையீடும் செய்வதில்லை. ஆனால் ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. இதில் தவறு செய்திருக்க மாட்டார் என்றே கருதுகிறோம். நில அபகரிப்புக்கு எதிராக இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஆரம்பத்தில் இருந்து குரல் கொடுக்கிறது. இதில் எம்.எல்.ஏ. ராமச்சந்திரன் எங்களுடன் போராடியவர் என்றார் பாண்டியன்.












Click it and Unblock the Notifications