இலங்கை மீனவர்களால் உயிர் பிழைத்தோம்: கரை திரும்பிய மீனவர்கள் கண்ணீர்
தூத்துக்குடி: இலங்கை மீனவர்கள் உதவியதால் தான் உயிர் பிழைத்தோம் என்று நடு்க்கடலில் தத்தளித்து மீட்கப்பட்ட தமிழக மீனவர்கள் கண்ணீர் மல்க தெரிவித்தனர்.
கன்னியாகுமரி லுர்து மாதா தெருவைச் சேர்ந்த ஜஹவர் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் கடந்த 12ம் தேதி சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீனவர்கள் கடலுக்கு சென்றனர். படகில் கன்னியாகுமரி சானல் ரோட்டைச் சேர்ந்த லிப்டன், கோவளம் விபிலன், சூசை அந்தோணி, சார்லஸ், இன்னாசி, பாக்கியம், கணேஷ், மிக்கெல், உவரி பாஸ்கரன், அல்போன்ஸ் ஆகிய 10 பேர் இருந்தனர்.
அவர்கள் மீன்பிடித்துவிட்டு கரை திரும்பாததால் பதற்றமடைந்த அப்பகுதி மீனவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் படகுகளில் கடலுக்கு சென்று தேடினர். எனினும் அவர்கள் குறித்த தகவல் கிடைக்கவில்லை. இந்நிலையில் படகு பழுதாகி கன்னியாகுமரியில் இருந்து வடகிழக்கு திசையில் நடுக்கடலில் தத்தளித்த அந்த 10 பேரும் இந்திய கடலோர காவல் படையினரால் மீட்கப்பட்டனர். இது குறித்து கடலோர காவல் படையினர் மீன்துறைக்கும், கன்னியாகுமரி கலெக்டருக்கும் தகவல் தெரிவித்தனர். மீட்கப்பட்ட மீனவர்கள் பழுதடைந்த படகுடன் இன்று அதிகாலை தூத்துக்குடி துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.
மீட்கப்பட்ட மீனவர்கள் கூறுகையில்,
கன்னியாகுமரியில் இருந்து வட கிழக்கில் சுமார் 33 கடல் மைல் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டிருந்தோம். அப்போது எங்களது படகு பழுதானது. அதனை சரி செய்ய முயன்றோம். படகில் இருந்த பேட்டரியும் சார்ஜ் இறங்கிவிட்டதால் வாக்கி டாக்கி மற்றும் வயர்லெஸ் மூலம் தொடர்பு கொள்ள முடியவில்லை. கடல் நீரோட்டத்தில் காற்றடிக்கும் திசையில் படகு இழுத்துச் செல்லப்பட்டது. ஆங்காங்கே நின்று கொண்டிருந்த தமிழகத்தைச் சேர்ந்த வேறு சில படகில் இருந்தவர்களிடம் உதவி கேட்டோம். ஆனால் அவர்கள் யாரும் உதவ முன்வரவில்லை. தொடர்ந்து சர்வதேச கடல் எல்லைக்குள் இழுத்துச் செல்லப்பட்டோம். அப்போது எதிரே மீ்ன்பிடித்து கொண்டிருந்த இலங்கையைச் சேர்ந்த மீனவர்களிடம் உதவி கோரினோம். அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் தான் மீட்கப்பட்டு உயிர் பிழைத்தோம் என்றனர்.