காவிரி, கொள்ளிடத்தில் புதிய மணல் குவாரிகளுக்கு மதுரை ஹைகோர்ட் தடை
மதுரை: காவிரி, கொள்ளிடம் ஆறுகளில் புதிய மணல் குவாரிக்கு அனுமதி அளிக்கவும், ஏற்கனவே வழங்கப்பட்ட அனுமதியை புதுப்பிக்கவும் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை இடைக்காலத் தடை விதித்துள்ளது.
காவிரி, கொள்ளிடத்தில் மணல் குவாரிகளுக்குத் தடை விதிக்கக் கோரி கரூரைச் சேர்ந்த காவிரி பாசன விவசாயிகள் பாதுகாப்பு சங்கத் தலைவர் மகேந்திரகுமார் மற்றும் சிலர் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனு நீதிபதிகள் ஆர். பானுமதி, ஜி.எம். அக்பர் அலி ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் முன்பு நேற்று (ஜூலை 16) விசாரணைக்கு வந்தது. காவிரி, கொள்ளிடத்தில் உள்ள மணல் குவாரிகள் குறித்த விவரங்களைத் திருச்சி, தஞ்சை, நாகை, அரியலூர், கரூர் ஆகிய 5 மாவட்ட கலெக்டர்கள் தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தனர்.
இதில் திருச்சி, கரூர் மாவட்ட கலெக்டர்கள் தாக்கல் செய்த அறிக்கைக்கு மனுதாரர்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிகக்ப்பட்டது. திருச்சி அருகே உள்ள உத்தமர்சீலி, கீழ்அன்பில், முசிறி, தொட்டியம் தாலுகா திருஎங்கோமலை, கரூர் மாவட்டம் வாங்கால் நேரு, ரெங்கநாதபுரம் உள்பட 7 இடங்களில் குவாரிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
ஆனால் குவாரி இயங்கும் பரப்பு, அனுமதி காலம், மணல் எடுக்கும் ஆழம் போன்ற பல முக்கிய விவரங்களை கலெக்டர்கள் அறிக்கையில் குறிப்படவில்லை. ஆந்திராவில், மத்திய சுற்றுச்சூழல்துறை அனுமதி பெறப்பட்ட பின்பு தான் மணல் குவாரிகள் செயல்படுகின்றது. அதே நடைமுறையை தமிழகத்திலும் கொண்டு வரவேண்டும். மேலும் காவிரி, கொள்ளிடத்தில் செயல்பட்டு வரும் மணல் குவாரிகளுக்குத் தடை விதிக்க வேண்டும் என மனு தாரர்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.
இதற்கு ஆட்சேபம் தெரிவித்த அரசு தலைமை வழக்குரைஞர், ஆந்திராவில் மணல் குவாரிகளைத் தனியார் நடத்தினர். ஆனால் தமிழகத்தில் அரசே நடத்தி வருகிறது. மேலும் புதிய மணல் குவாரிகளுக்கு அனுமதி அளிக்கவில்லை. சட்ட விரோதமாக மணல் குவாரி நடத்தவில்லை. ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட குவாரிகள் மட்டுமே தொடர்ந்து இயங்கி வருகின்றன என்றனர்.
அரசு தரப்பு வாதத்தைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், கரூர், திருச்சி, தஞ்சை, நாகை, அரியலூர் ஆகிய மாவட்டங்களில் புதிய மணல் குவாரிகளுக்கு அனுமதி அளிக்கவோ, பழைய குவாரிக்கான அனுமதியைப் புதுப்பிக்கவோ கூடாது என உத்தரவிட்னர். மேலும் இந்த வழக்கு விசாரணையை வரும் 26 ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.












Click it and Unblock the Notifications