சர்ச்சையில் சிக்குவது அல்கா லம்பாவுக்கு அல்வா சாப்பிடுவது போல!
தேசிய மகளிர் ஆணையம் அனுப்பிய உண்மை கண்டறியும் குழு குவஹாத்தி வந்து நேரில் விசாரணை நடத்தியது. பாதிக்கப்பட்ட பெண்ணையும் நேரில் சந்தித்து விசாரித்தனர்.
பிறகு நடந்த செய்தியாளர்கள் கூட்டத்தின்போது பாதிக்கப்பட்ட பெண் குறித்த விவரங்களை பகிரங்கமாக தெரிவித்தார் அல்கா. இது சர்ச்சையை ஏற்படுத்தி விட்டது. இதுபோன்று பாதிப்புக்குள்ளான பெண்களின் விவரம், அடையாளத்தை வெளிப்படுத்தக் கூடாது என்பது உச்சநீதிமன்றத்தின் உத்தரவாகும். ஆனால் அல்கா அவர் பாட்டுக்கு அப்பெண் குறித்த விவரங்களை வெளிப்படுத்தியதால் பாஜக உள்ளிட்ட கட்சிகள் கண்டனம் தெரிவித்தன.
இதையடுத்து அல்காவை உண்மை கண்டறியும் குழுவிலிருந்து தேசிய மகளிர் ஆணையம் நீக்கியுள்ளது.
அல்கா லம்பா, அடிப்படையில் ஒரு அரசியல்வாதி. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்.காங்கிரஸ் கட்சியின் செயலாளராக இருந்தவர்.
1994ம் ஆண்டு அரசியலுக்கு வந்த அல்கா, முதலில் தேசிய மாணவர் யூனியனில் இடம் பெற்றிருந்தார். பின்னர் டெல்லி மாநில மகளிர் ஒருங்கிணைப்பாளராகப் பணியாற்றினார். தேசிய மாணவர் யூனியனின் அகில இந்தியத் தலைவராகவும் செயல்பட்டுள்ளார்.
அழகால் கிடைத்த பதவி
2002ம் ஆண்டு அகில இந்திய மகளிர் காங்கிரஸின் பொதுச் செயலாளராக இவர் செயல்பட்டுள்ளார். இது அப்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆனால் ராகுல் காந்தியுடன் இவருக்கு இருந்த நெருக்கமான நட்பு மற்றும் அழகு காரணமாகவே இப்பதவி கிடைத்ததாக அப்போது காங்கிரஸுக்குள்ளேயே பலரும் குமுறினர்.
2003ம் ஆண்டு இவரை டெல்லி சட்டசபைத் தேர்தலில் நிறுத்தியது காங்கிரஸ். மூத்த பாஜக தலைவர் மதன் லால் குராணாவை எதிர்த்துப் போட்டியிட்டுத் தோல்வி அடைந்தார்.
2006ம்ஆண்டு இவர் காங்கிரஸ் காரியக் கமிட்டி உறுப்பினராக்கப்பட்டார். இதுவும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும் டெல்லி பிரதேச காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளராகவும் நியமிக்கப்பட்டார். இதுவும் சர்ச்சையைக் கிளப்பியது. இப்படி இவருக்கு மட்டும் அடுத்தடுத்து உயர் பதவிகள் கிடைத்து வந்ததால் காங்கிரஸ் கட்சிக்குள் இவருக்கு எதிர் கோஷ்டி படு வேகமாக வலுத்து வந்தது.
தற்போது இவர் கோ இந்தியா பவுண்டேஷன் என்ற என்ஜிஓ அமைப்பை நடத்தி வருகிறார்.
அல்கா பலமுறை சர்ச்சைகளில் சிக்கியுள்ளார். குவஹாத்தி சம்பவத்திற்கு முன்பும் கூட இவர் சில சர்ச்சைகளில் சிக்கினார்.
2003ம் ஆண்டு இவர் தனது முன்னாள் கணவர் லோகேஷ் கபூரின் வீட்டை ஆக்கிரமித்துக் கொண்டதாக சர்ச்சை வெடித்தது. இதுதொடர்பாக லோகேஷ் கபூர் போலீஸில் புகார் கொடுத்தார். அதில், தன்னை தனது அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி மிரட்டுகிறார் அல்கா என்று கூறியிருந்தார் லோகேஷ் என்பது நினைவிருக்கலாம்.