இலங்கை ராணுவத்திற்கு இந்தியாவில் பயிற்சியளிக்க மத்திய அரசு சம்மதித்ததேன்? ஞானதேசிகன் விளக்கம்
மதுரை: இலங்கை ராணுவத்தினருக்கு பயிற்சி அளிக்க மத்திய அரசு ஒப்புக் கொண்டதற்கான காரணம் குறி்த்து தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் விளக்கம் அளித்துள்ளார்.
இது குறித்து அவர் மதுரையில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
பெருந்தலைவர் காமராஜரின் 110வது பிறந்தநாள் விழா காங்கிரஸ் சார்பில் மதுரை மேலமாசி வீதி-வடக்குமாசி வீதி சந்திப்பில் வரும் 28ம் தேதி நடைபெறுகிறது. மதுரை நகர், புறநகர், ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், சிவகங்கை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கி நடக்கும் இந்த விழாவில் மத்திய அமைச்சர்கள் ப. சிதம்பரம், ஜி.கே. வாசன், ஜெயந்தி நடராஜன், முன்னாள் மாநில தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், தங்கபாலு, குமரி அனந்தன், கிருஷ்ணசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொள்கின்றனர்.
தமிழகத்தில் புதிய நிர்வாகிகள் நியமனம் முடிந்த பிறகு காங்கிரஸ் கட்சி கிராமம் கிராமமாகச் சென்று மக்களை சந்திக்கும். மாநில கமிட்டிக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்படுகிறார்கள். அதே சமயம் மாவட்ட அளவில் நிர்வாகிகள் சீரமைக்கப்படுவார்கள். இந்த பணி வரும் டிசமபருக்குள் நிறைவடையும். மாவட்ட நிர்வாகிகள் நியமிக்கப்படாததால் ஆர்ப்பாட்டம் போன்றவற்றை நடத்துவதில் சிக்கல் ஏற்படுகிறது.
நாங்கள் மாநில அரசு செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டி வருகிறோம். பிற கட்சிகளுடன் ஒப்பிடுகையில் காங்கிரஸ் மாறுபட்ட நோக்கில் இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். தமிழகத்திற்கு வழங்கப்படும் நிதியை மத்திய அரசை குறைத்துள்ளதாக முதல்வர் ஜெயலலிதா கூறுவது தவறானது. தமிழகத்தின் வளர்ச்சிக்கும், மேம்பாட்டிற்கும் கூடுதல் நிதி கிடைக்க நானும் வலியுறுத்துவேன்.
சார்க் நாடுகளின் ஒப்பந்தப்படி அதில் உள்ள நாடுகள் பல பரிவர்த்தனைகள் செய்து வருகின்றன. அந்த ஒப்பந்தத்தின்படி தான் இந்தியா இலங்கை ராணுவத்தினருக்கு பயிற்சி அளிக்க சம்மதித்தது. ஆனால் அதற்கு தமிழகத்தில் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து ஒப்பந்தத்தை மீறக்கூடாது என்ற எணணத்தில் இலங்கை ராணவத்தினருக்கு பெஙகளூரில் பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டது.
டெசோ மாநாடு குறித்து நான் எதுவும் தெரிவிக்கவில்லை. இலங்கையில் வாழும் தமிழர்கள் பாதுகாக்கப்பட வேண்டும், வளப்படுத்தப்பட வேண்டும் என்ற காங்கிரஸின் கருத்தையே நான் தெரிவித்தேன். இது குறி்த்த திமுக தலைவர் கருணாநிதியின் கருத்துகள் காங்கிரஸ் கட்சிக்கு ஏற்படையதாக உள்ளன. அவை வரவேற்கத்தக்கது. இலங்கையில் வாழும் தமிழர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க அனைவரும் ஒன்றுபட்டால் அதில் எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி என்றார்.












Click it and Unblock the Notifications