நாடாளுமன்ற தேர்தலில் பாஜக 100 சதவீதம் வெற்றி பெறும்: ஹெச்.ராஜா நம்பிக்கை
பொள்ளாச்சி: வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக 100 சதவீதம் வெற்றி பெறும் என்பதை பொறுத்துக் கொள்ள முடியாத சில எதிர்க்கட்சிகள் பாஜகவுக்குள் பிளவு ஏற்படுத்த முயற்சி செய்கின்றன என்று அக்கட்சியின் மாநில துணை தலைவர் ஹெச். ராஜா தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் பொள்ளாச்சியில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
தமிழகத்தில் பாஜக அமைப்பு தேர்தல் நடைபெற உள்ளதால் புதிய உறுப்பினர் சேர்க்கை தீவிரமாக நடைபெற்று வருகின்றது. இப்பணி செப்டம்பர் 20ம் தேதி வரை நடைபெறும். பின்பு நகரம், ஒன்றியம் அளவிலான தேர்தல் நடைபெறும். இதனையடுத்து டிசம்பர் மாதம் மாநில தலைவர் தேர்தல் நடைபெறும்.
காங்கிரஸ் ஆட்சியில் நடுத்தர மக்களை பாதிக்கும் அளவு விலைவாசி உயர்ந்துள்ளது. ஆன்லைன் வர்த்தகம் மூலம் உணவுப் பொருட்கள் பதுக்கப்படுவதால் தான் விலைவாசி உயர்வும், உணவு பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளது.
நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்திக்கும். தற்போது பாஜகவுக்கு தேசிய அளவில் மக்கள் மத்தியில் செல்வாக்கு கூடியுள்ளது. அதனால் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக 100 சதவீதம் வெற்றி பெறும். இந்த வெற்றியை பொறுத்துக்கொள்ள முடியமால் சில எதிர்க்கட்சிகள் பாஜகவுக்குள் பிளவு ஏற்படுத்த முயற்சி செய்கின்றன. ஆனால் அவர்களது கனவு பலிக்காது.
பாஜக ஆட்சியில் தான் இலங்கை தமிழர்களுக்கு பாதுகாப்பு இருந்தது. காங்கிரஸ் ஆட்சியில் இலங்கை தமிழர்களுக்கு பாதுகாப்பு இல்லை.
பாஜக, அதிமுக வெவ்வேறு கட்சியாக இருந்தாலும், இரு கட்சிகளும் கொள்கையளவில் ஒன்றாகவே உள்ளது. வரும் நாடாளுமன்ற தேர்தலின்போது பாஜக யாருடன் கூட்டணி அமைக்கும் என்று அப்போது தான் இறுதி முடிவு செய்யும் என்றார்.












Click it and Unblock the Notifications