ரூ.22 கோடி மதிப்பில் அம்பத்தூரில் ரயில்வே மேம்பாலம்: டி.ஆர்.பாலு தகவல்
திமுக நாடாளுமன்ற குழு தலைவரும், ரயில்வே நாடாளுமன்ற நிலைக் குழு தலைவருமான டி.ஆர்.பாலு, ஸ்ரீபெரும்புதூர் தொகுதி தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் பல்வேறு பணிகளுக்கான ஒதுக்கீட்டு ஆணைகளை வழங்கினார். இதன் மூலம் ரூ.1 கோடியே 15 லட்சம் மதிப்பிலான பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
இதன்பிறகு பேசிய டி.ஆர்.பாலு கூறியதாவது,
அம்பத்தூர் டி.ஐ.சைக்கிள் நிறுவனம் அருகே, ரூ.22 கோடி மதிப்பில் சென்னை-திருப்பதி சாலையின் குறுக்கே ரயில்வே துறையின் செலவில், மேம்பாலம் கட்டப்பட உள்ளது. இதற்கான ஒப்பந்தப்புள்ளிகள் அளிக்கும் பணிகள் முடிவடைந்துள்ளது. எனவே பணிகள் அடுத்த மாதம் (ஆகஸ்ட்) துவங்கும்.
அதேபோல அம்பத்தூர் பழைய எம்.டி.ஹெச். சாலையில், சென்னை-திருவள்ளூர் சாலைக்கு குறுக்கே ரூ.21 கோடி செலவில் சுரங்கப்பாதை அமைப்பதற்கான திட்டத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கொரட்டூரில் ரயில்வே சந்திப்பு எண் 4க்கு குறுக்கே ரயில்வே தரப்பில் 18 மீட்டர் அகல சுரங்கப்பாதை அமைக்க சுமார் ரூ.35 கோடி மதிப்பீட்டில் ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டுள்ளது என்றார்.
மேலும் டி.ஆர்.பாலு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி திட்டங்களின் கீழ் 79வது மண்டலத்திற்குட்பட்ட சி.எஸ்.ஐ. பள்ளியில் வகுப்பறை கட்டுதல், 80வது மண்டலத்தில் நூலகம் அமைத்தல், ரேஷன் கடை கட்டடம் கட்டுதல், கள்ளிக்குப்பத்தில் உள்ள செங்குன்றம் சாலையில் உயர் கோபுர விளக்கு அமைத்தல் ஆகிய பணிகளுக்காக தலா ரூ.5 லட்சம் வீதம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கொரட்டூர் ரயில்வே சந்திப்பில் பாதசாரிகளுக்கான இருப்பு மேம்பாலம் அமைக்க ரூ.25 லட்சமும், 84வது மண்டலத்தில் மாநகராட்சி பள்ளியில் வகுப்பறை கட்ட ரூ.10 லட்சமும், 85வது மண்டலத்தில் ரேஷன் கடை, பள்ளி வகுப்பறை, 86வது மண்டலத்தில் அம்பத்தூர் குப்பத்தில் ரேஷன் கடை, 87வது மண்டலத்தில் ரேஷன் கடை கட்ட தலா ரூ.5 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் 87வது மண்டலத்தில் சமூக கூடம் கட்ட ரூ.25 லட்சமும், 81வது மண்டலத்தில் தானியங்கி போக்குவரத்து சிக்னல், 88வது மண்டலத்தில் நூலகம், 80வது மண்டலத்தில் பம்ப் செட் கொண்ட தண்ணீர் தொட்டி ஆகியவை அமைக்க தலா ரூ.5 லட்சமும் ஒதுக்கீடு செய்யப்பட்டதாக அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.