தலைமை ஆசிரியையின் பிடிவாதம்... வகுப்பறையில் தற்கொலைககு முயன்ற ஆசிரியை
சிவகங்கை பிஎட் படிப்பில் சேர தலைமை ஆசிரியை அனுமதி தர மறுத்து வந்ததால் மனம் உடைந்த அரசுப் பள்ளி ஆசிரியை, தூக்க மாத்திரை சாப்பிட்டுத் தற்கொலைக்கு முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே கண்ணங்குடி என்ற ஊரில் அரசுப் பள்ளி உள்ளது. இங்கு உடல் கல்வி ஆசிரியையாக இருப்பவர் மணிமாலா. இவர் பிஎட் படிக்க விரும்பினார். அதற்கு தலைமை ஆசிரியையின் அனுமதி தேவை. ஆனால் தலைமை ஆசிரியை தெய்வானை அனுமதி தராமல் இழுத்தடித்து வந்துள்ளார்.
பல மாதங்களாக அனுமதி தராமல் இழுத்தடித்து வந்ததால் நேற்று தலைமை ஆசிரியையை அணுகி, இன்றுதான் கடைசி நாள், விண்ணப்பிக்க வேண்டும், தயவு செய்து அனுமதி தாருங்கள் என்று கோரியுள்ளார் மணிமாலா. ஆனால் தலைமை ஆசிரியை மறுத்து விட்டதாக தெரிகிறது.
இதையடுத்து இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் வெடித்தது. அதைத் தொடர்ந்து தனது வகுப்பறைக்கு வந்த மணிமாலா அங்கு தூக்க மாத்திரையை சாப்பிட்டு விட்டார். கதவையும் மூடிக் கொண்டார்.
தூக்க மாத்திரை சாப்பிட்டு அவர் மயங்கி விழுந்த நிலையில் இருப்பதைப் பார்த்த சக ஆசிரிய, ஆசிரியைகள் கதவை உடைத்து உள்ளே சென்று அவரை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. போலீஸார் இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
மாவட்ட கல்வி அதிகாரிகள் இதுதொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளனர். விசாரணைக்குப் பின்னர் தலைமை ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications