சிறுமி கற்பழிப்பு வழக்கு: முன்னாள் எம்.எல்.ஏ.வுக்கு திருச்சியில் ஆண்மை பரிசோதனை
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் பீர்மேடு பகுதியை சேர்ந்த சந்திரன் என்பவரின் மகள் சத்யா, பெரம்பலூர் முன்னாள் தி.மு.க எம்.எல்.ஏ. ராஜ்குமார் வீட்டில் தங்கி இருந்து, வீட்டு வேலைகள் செய்து வந்தார்.
அவர் திடீரென மர்மமான முறையில் இறந்து போனார். உடல்நலக் குறைவால் அந்த சிறுமி இறந்ததாக ராஜ்குமார் தரப்பில் கூறப்பட்டது. ஆனால் மகள் கற்பழித்து கொலை செய்யப்பட்டதாக தந்தை சந்திரன் புகார் கூறினார்.
இதையடுத்து பெரம்பலூர் போலீசார் நடத்திய விசாரணையில் முன்னாள் எம்.எல்.ஏ. ராஜ்குமார் உட்பட 4 பேர் சிக்கினர். தற்போது திருச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ள 4 பேருக்கும் ஆண்மை பரிசோதனை நடத்த பெரம்பலூர் நீதிமன்றம் அனுமதி அளித்திருந்தது.
இதையடுத்து ராஜ்குமார் உட்பட 4 பேரும் திருச்சி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லபட்டனர். அவர்களுக்கு தனித்தனியாக பரிசோதனைகள் நடத்தப்பட்டது. சோதனையின் முடிவில் ராஜ்குமார் உட்பட 4 பேரும் ஆண்மை உள்ளவர்கள்தான் என மருத்துவர்கள் அறிக்கை சமர்ப்பித்துள்ளனர். இதைத் தொடர்ந்து 4 பேரும் மீண்டும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.