அமெரி்க்காவில் பேட்மேன் படம் ஓடிய தியேட்டரில் முகமூடி நபர் துப்பாக்கிச் சூடு: 15 பேர் பலி!
அமெரிக்காவின் டென்வர் புறநகர் பகுதியான அரோராவில் உள்ள மாலில் அமைந்துள்ள திரையரங்கில் நேற்று நள்ளிரவில் புதிய பேட்மேன் படமான தி டார்க் நைட் ரைஸஸ் திரையிடப்பட்டது. அப்போது புகையில் இருந்து தப்பிக்கும் முகமூடி அணிந்த மர்ம நபர் தியேட்டருக்குள் புகுந்து யாரும் எதிர்பாராவிதமாக தான் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து சுடத் தொடங்கினார். இதில் அங்கு படம் பார்த்துக் கொண்டிருந்த குழந்தைகள் உள்பட 15 பேர் பலியாகினர். மேலும் 50 பேர் படுகாயம் அடைந்தனர். அதன் பிறகு அந்த நபர் கண்ணீர்ப்புகை குண்டை வீசிவிட்டுச் சென்றுவிட்டார். அவர் 3 துப்பாக்கிகள் மற்றும் 1 கத்தியைக் கொண்டு வந்துள்ளார்.
முதலில் அவர் சுடத் தொடங்கியதும் ஏதோ பட விளம்பரத்திற்காக செய்கிறார்கள் என்று பார்வையாளர்கள் நினைத்துள்ளனர். அதன் பிறகே அவர்களுக்கு விபரீதம் புரிந்துள்ளது. இந்த சம்பவத்தில் படுகாயம் அடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக போலீசார் ஒருவரை கைது செய்து விசாரித்து வருகிறார்கள். நள்ளிரவில் நடந்த இந்த சம்பவத்தால் அமெரி்க்காவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
முன்னதாக பெரும் எதிர்பார்ப்பை கிளப்பிய படமான தி டார்க் நைட் ரைஸஸ் குறித்து பிரபல திரை விமர்சன இணையதளமான ராட்டன் டொமேட்டோஸ் விமர்சனம் செய்திருந்தது. அந்த கட்டுரையின் கமென்ட்ஸ் பாக்ஸ் நிரம்பிவிட்டது. அதில் சாதாரண கமென்ட்ஸ் வரவில்லை. வாசகர்கள் ஒருவருக்கு ஒருவர் கொலை மிரட்டல், கற்பழிப்பு மிரட்டல் போன்று பல்வேறு மிரட்டல் கமென்ட்ஸ்களை எழுதி மிரட்டியதால் கமென்ட்ஸ் பாக்ஸையே தூக்கிவிட்டனர். அந்த அளவுக்கு இந்தப் படம் குறித்து உலகெங்கும் மிகச் சூடான விவாதங்கள் நடந்து வருகின்றன.
இந்நிலையில் தான் துப்பாக்கிச் சூடும் நடந்துள்ளது.