தென்சீனக் கடல் விவகாரம்; சம்பந்தபட்ட நாடுகள் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண இந்தியா வலியுறுத்தல்
மும்பை: தென்சீனக் கடற்பரப்பு யாருக்கு சொந்தம் என்பதில் சம்பந்தப்பட்ட நாடுகள் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியுள்ளது.
மும்பையில் நடைபெற்ற கடற்படை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பின்பு செய்தியாளர்களிடம் பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே. அந்தோணி கூறுகையில், சர்வதேச கடற்பரப்பில் அனைத்து கப்பல் போக்குவரத்தும் எந்தவித தடங்கலுமின்றி சுதந்திரமாக பயணிக்கக் கூடிய சூழல் இருக்க வேண்டும். சர்வதேச கடற்பரப்பில் பிராந்திய உரிமை கோரும் பிரச்சனைகள் ஏதும் இருப்பின் தொடர்புடைய நாடுகள் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என்றார்.
தென்சீனக் கடற்பரப்பில் எரிவாயு வளம் அதிகம் உள்ளது. இக்கடற்பரப்பு முழுவதும் தங்களுக்கே சொந்தம் என்கிறது சீனா. ஆனால் ஆசியான் அமைப்பில் இடம்பெற்றுள்ள இந்தோனேசியா, வியட்நாம் உள்ளிட்ட பல நாடுகளும் தங்களது நாடுகளுக்கு அருகே உள்ள தீவுகள் தங்களுக்கே சொந்தம் என்கின்றன. இந்தியாவும் தென்சீனக் கடல் எரிவாயு வளம் மீது ஒரு கண் வைத்து செயல்படுகிறது. இதற்காக வியட்நாமுடன் இணைந்து எண்ணெய் அகழாய்வுப் பணியையும் மேற்கொண்டிருந்தது. இந்நிலையில் தென்சீனக் கடற்பரப்பு உள்ளிட்ட அனைத்து கடற்பரப்பு விவகாரங்களுக்கும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என்று இந்தியா அழுத்தம் கொடுத்திருக்கிறது.












Click it and Unblock the Notifications