தீப்பிடித்து எரிந்த சிலிண்டரை தூக்கி வெளியில் வீசிய ராஜ்பவன் ஊழியர்
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில், தீப்பிடித்துக் கொண்ட எரிவாயு சிலிண்டரை தூக்கி வெளியே வீசினார் ராஜ்பவன் ஊழியர். நல்லவேளையாக சிலிண்டர் வெடித்துச் சிதறாததால், எந்தவிதமான பெரிய ஆபத்தும் ஏற்படாமல் போனது.
ஜெய்ப்பூரில் உள்ள ஆளுநர் மாளிகையான ராஜ்பவனில் ஊழியர்களுக்கான குவார்ட்டர்ஸ் உள்ளது. அங்கு கிளீனராக பணியாற்றும் புத்தா பிரகாஷ் என்பவர் வசிக்கிறார். நேற்று அவர் தனது வீட்டில் இருந்தபோது காஸ் சிலிண்டரில் தீப்பிடித்துக் கொண்டுள்ளது. இதைப் பார்த்துப் பயந்து போன அவர் வேகமாக சிலிண்டரைத் தூக்கி அப்படியே மெயின் ரோட்டில் வீசினார்.
அவர் சிலிண்டரை வீசிய இடமானது, ராஜ்பவனுக்கும், முதல்வரின் அதிகாரப்பூர்வ இல்லத்திற்கும் இடைப்பட்ட இடம் என்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அதிர்ஷ்டவசமாக அப்பகுதியில் யாரும் இல்லை மற்றும் சிலிண்டரும் வெடித்துச் சிதறவில்லை என்பதால் பேராபத்து தவிர்க்கப்பட்டது. உடனடியாக அங்கிருந்தோர் விரைந்து வந்து தீயை அணைத்து அசம்பாவிதச் சம்பவத்தைத் தடுத்து விட்டனர்.












Click it and Unblock the Notifications