நாகர்கோவில்: வயலில் பாய்ந்த கோவை பயணிகள் ரயில்
நாகர்கோவில்: நாகர்கோவில் ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த கோவை பயணிகள் ரயிலை யார்டில் இருந்து 3வது பிளாட்பார்முக்கு மாற்றும்போது தடம்புரண்டதில் என்ஜின் வயலில் பாய்ந்தது.
நாகர்கோவிலில் இருந்து கோவைக்கு இன்று காலை 7.20 மணிக்கு கோவை பயணிகள் ரயில் புறப்பட வேண்டியிருந்தது. அதனால் ரயிலை யார்டில் இருந்து 3வது பிளாட்பார்முக்கு கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டது. அப்போது 2வது பிளாட்பார்மில் குமரி எக்ஸ்பிரஸ் நின்று கொண்டிருந்ததால் கோவை ரயிலை கரியமாணிக்கபுரம் வரை உள்ள எண்ட்லைன் பகுதி வழியாக 3வது பிளாட்பார்முக்கு கொண்டு செல்ல முடிவு செய்தனர்.
அதன்படி ரயிலை இயக்கியபோது திடீர் என்று அது எண்ட்லைன் பகுதியை இடித்தது. இதில் ரயிலின் என்ஜின் மற்றும் தளவாடப் பொருட்கள் வைக்கும் பேக்கேஜ் பெட்டியும் வயலில் பாயந்தது. இதையடுத்து அந்த என்ஜினையும், பேக்கேஜ் பெட்டியையும் கழற்றிவிட்டு வேறு என்ஜின் மூலம் ரயில் 3வது பிளாட்பார்முக்கு கொண்டு செல்லப்பட்டது.
இந்த சம்பவத்தால் இன்று காலை 7.20 மணிக்கு புறப்பட வேண்டிய கோவை பயணிகள் ரயில் 1 மணிநேரம் தாமதமாக 8.30க்கு புறப்பட்டுச் சென்றது. அந்த என்ஜினையும், பேக்கேஜ் பெட்டியையும் தூக்க திருவனந்தபுரத்தில் இருந்து இயந்திரம் வரவழைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications