7 வயது சிறுவனிடம் பாலியல் அசிங்கம்... 57 வயது வாத்தியார் கைது!

அன்று குருகுலங்களில் காணப்பட்ட நிலைமை இன்று நமது பள்ளிகளில் இல்லை. ஆசிரியர்களுடன் ஓடிப் போகும் மாணவிகள், மாணவிகளிடம் சில்மிஷம் செய்யும் ஆசிரியர்கள், மாணவனை தவறாகப் பயன்படுத்தும் ஆசிரியைகள் என சங்கடமான செய்திகள்தான் தினசரி வருகின்றன.
அந்த வகையில், சென்னை சைதாப்பேட்டையில் 57 வயது ஆசிரியர் ஒருவர், 7 வயதேயாகும் 3வது வகுப்பு சிறுவனிடம் பாலியல் சேட்டைகள் செய்து கைதாகியுள்ளது அனைவரையும் அதிர வைத்துள்ளது. பணியிலிருந்து ஓய்வு பெற ஒருவருடமே பாக்கி உள்ள நிலையில் இந்த ஆசிரியர் செய்த செயல் அனைவரையும் வெட்கித் தலை குணிய வைப்பதாக உள்ளது.
சென்னை சைதாப்பேட்டையில் உள்ளது ஞானம் மெட்ரிகுலேஷன் பள்ளி. தனியார் பள்ளியான இதில், ரூபன் ரவிக்குமார் என்ற ஆசிரியர் பணியாற்றி வருகிறார்.
இந்தப் பள்ளியில் படித்து வரும் காவேரி நகரைச் சேர்ந்த 7 வயது சிறுவனிடம் ஆசிரியர் ரூபன் தவறாக நடந்து கொண்டதாக தெரிகிறது. மாணவன் தினசரி பள்ளியிலிருந்து மிகவும் களைத்துப் போய் வருவதைக் கவனித்த அவனது பெற்றோர் என்னவென்று தெரியாமல் குழம்பியுள்ளனர்.
இந்த நிலையில் அந்த மாணவன் தனது சித்தப்பாவிடம் ஆசிரியர் ரூபன் செய்த செயல்களைக் கூறியுள்ளான். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தார் சித்தப்பா. உடனே மாணவனின் பெற்றோரிடம் அவர் நடந்ததைக் கூற அவர்கள் கொதித்தெழந்து விட்டனர். பின்னர் பெற்றோர்களும், உறவினர்களும் பள்ளியை முற்றுகையிட்டு ஆசிரியர் ரூபனை உடனே டிஸ்மிஸ் செய்யக் கோரி போராட்டத்தில் குதித்தனர்.
தகவல் அறிந்து அப்பள்ளியில் படிக்கும் மற்ற மாணவர்களின் பெற்றோர்களும் குவி்ந்து விட்டனர். இதனால் பரபரப்பாகி விட்டது. போலீஸார் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது ஆசிரியர் ரூபன் ரவிக்குமாரும் அங்கு இருந்தார். அவரைப் பார்த்த பெற்றோர் சிலர் அவரை அடித்து விட்டனர்.
உடனடியாக தலையிட்ட போலீஸார் ரூபன் ரவிக்குமாரைக் கைது செய்து அங்கிருந்து கொண்டு சென்றனர். அவர் மீது சிறார் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் ஐபிசியின் 2 பிரிவுகளின் கீழும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அவரை கோர்ட்டில் நிறுத்திய போலீஸார் பின்னர் சிறையில் அடைத்தனர்.
இந்த விவகாரம் குறித்து சிறுவனின் உறவினர் ஒருவர் கூறுகையில், கடந்த ஒரு வாரமாகவே பிள்ளை சரியில்லை. மிகவும் சோர்ந்து போய் வீட்டுக்கு வந்தான். அவனது அப்பாவும், அம்மாவும் என்ன என்று விசாரித்த போது அவனால் சொல்ல முடியவில்லை. சொன்னால் ஆசிரியர் ஏதாவது செய்து விடுவாரோ என்று பயந்து சொல்லாமல் இருந்துள்ளான். பிறகு அவனது சித்தப்பா சற்று விவரமாக கேட்ட பிறகுதான் நடந்ததைக் கூறினான்.
அவன் கூறியதை அப்படியே சொல்ல வாய் கூசுகிறது. அந்த அளவுக்கு அந்த ஆசிரியர் அசிங்கமாக நடந்துள்ளார். அதைக் கேட்டவுடன் எங்களுக்கு இதயமே வெடித்து விடும் போலாகி விட்டது. இதுபோன்ற ஆசிரியர்களுக்கு கடும் தண்டனை கொடுத்தால்தான் இப்படிப்பட்ட ஆட்களுக்கு நல்ல பாடமாக அமையும் என்றார் கோபமாக.












Click it and Unblock the Notifications