பள்ளிப் பேருந்தின் ஜன்னலில் தலை சிக்கி மின்கம்பத்தில் மோதி மாணவன் பலி!
டெல்லி: பள்ளிப் பேருந்தின் ஜன்னல் வழியாக சாலையோரத்தில் விற்ற ஐஸை வாங்க முயன்ற 16 வயது மாணவன், ஜன்னலில் தலை சிக்கிக் கொண்டதால், மின் கம்பத்தில் தலை மோதி பரிதாபமாக உயிரிழந்தான். டெல்லியில் இந்த துயரச் சம்பவம் நடந்துள்ளது.
சென்னையில் 2வது வகுப்பு மாணவி ஸ்ருதி பள்ளிப் பேருந்தின் ஓட்டையில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்த கொடுமைச் சம்பவமே இன்னும் மக்களின் மனதிலிருந்து அகலாத நிலையில் டெல்லியில் நேற்று நடந்துள்ள இந்த சம்பவம் மக்களை பதற வைத்துள்ளது.
டெல்லி, பஞ்சாபி பாக் ஹன்ஸ்ராஜ் மாடல் ஸ்கூலில் 10வது வகுப்பு படித்து வந்தவர் ஜஸ்கிரண் சாவ்லா. 16 வயதான இவர் பள்ளிப் பேருந்தில் நேற்று பயணித்துள்ளார். பேருந்து ஒரு இடத்தில் மாணவர்களை இறக்கி விடுவதற்காக நின்றுள்ளது. அப்போது சாலையோரத்தில் விற்ற ஐஸ் கிரீ்மை வாங்குவதற்காக, சாவ்லா ஜன்னல் வழியாக தலையை நீட்டி வாங்கியுள்ளார். அப்போது திடீரென பேருந்து திடீரென கிளம்பி விட்டது. இதனால் தலையை உள்ளே எடுக்க முயன்றார் சாவ்லா. ஆனால் தலை சிக்கிக் கொண்டு வரவில்லை.
இதை அறியாத டிரைவர் பேருந்தை வேகமாக ஓட்டியுள்ளார். அப்போது சாலையோரம் இருந்த மின்கம்பத்தில் சாவ்லாவின் தலை பலமாக மோதியதில் பரிதாபமாக அவர் உயிரிழந்தார். அதன் பின்னர் சக மாணவர்கள் அலறியதைத் தொடர்ந்து பேருந்து நிறுத்தப்பட்டது.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி விட்டது. இச்சம்பவம் குறித்து அதிர்ச்சி தெரிவித்துள்ள டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித், அனைத்து பள்ளிப் பேருந்துகளிலும் பாதுகாப்பு அம்சங்கள் முறையாக கடைப்பிடிக்கப்படுகின்றனவா என்பது குறித்து ஆய்வு நடத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
பள்ளி வாகனங்களில் 13 விதமான விதிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று ஏற்கனவே உச்சநீதிமன்றம் தெளிவான உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது. அதில் முக்கியமானது, பள்ளிப் பேருந்துகளின் ஜன்னல்களில் குறுக்கு கிரில் கம்பிகளைப் பொருத்த வேண்டும் என்பது. ஆனால் பெரும்பாலான வாகனங்களில் இது பின்பற்றப்படுவதில்லை. ஆர்.டி.ஓ அலுவலகங்களிலும் இதைப் பெரிதாக கண்டு கொள்வதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications