கருணாநிதியை அவதூறாக பேசிய வழக்கில் கோர்ட்டில் ஆஜராக வைகோவுக்கு உத்தரவு
சென்னை: திமுக தலைவர் கருணாநிதியை அவதூறாக பேசிய வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கு சென்னை செஷன்ஸ் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2009ம் ஆண்டு மே மாதம் 31ம் தேதி சென்னை புரசைவாக்கத்தில் தமிழ் ஈழ ஆதரவு பொதுக் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கலந்து கொண்டு பேசுகையில், இயக்குனர் பாரதிராஜாவின் அலுவலகத்தில் நடந்த தாக்குதல் சம்பவத்திற்கு அப்போதைய முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதி தான் காரணம் என்று பேசினார்.
இதையடுத்து கருணாநிதியின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் பேசியதாக வைகோ மீது சென்னை மாநகர முன்னாள் குற்றவியல் அரசு வழக்கறிஞர் அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணை சென்னை 7வது செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இந்த வழக்கு நீதிபதி கலியமூர்த்தி முன்னிலையில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது வைகோ ஆஜராகவில்லை. அவரது சார்பில் வழக்கறிஞர் தேவதாஸ் ஆஜரானார். அரசு வழக்கறிஞர் எம்.எல்.ஜெகன், சிறப்பு வழக்கறிஞர் எம்.கே.அசோகன் ஆகியோர் ஆஜராகி வழக்கில் சாட்சி விசாரணையை துவங்க உத்தரவி்டுமாறு கூறினர்.
இதையடுத்து வழக்கு விசாரணை வரும் ஆகஸ்ட் 23ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. அன்றைய தினம் முதல் 3 சாட்சிகளிடம் விசாரணை நடத்த உத்தரவிட்ட நீதிபதி அதே நாளில் வைகோ நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications