எஸ்.ஐ.யை ஏட்டு ஏன் கொன்றார்? பரபரப்பு தகவல்கள்
நெல்லை: சுரண்டை எஸ்.ஐ. இசக்கி முத்து கொலை செய்யப்பட்டது ஏன் என்பது குறித்து பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளன.
நெல்லை மாவட்டம் சுரண்டை காவல் நிலைய சிறப்பு எஸ்.ஐ. இசக்கி முத்துவை அதே காவல் நிலையத்தில் பணிபுரிந்து சுத்தமல்லிக்கு மாற்றப்பட்ட ஏட்டு சண்முகராஜா குத்திக் கொலை செய்தார். இது தொடர்பான பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.
சுரண்டையில் கொலையான சிறப்பு எஸ்.ஐ. இசக்கி 10 ஆண்டுகளுக்கு முன் முன்னீர் பள்ளம் காவல் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றியுள்ளார். அப்போது ஒரு வழக்கு விசாரணையின்போது அங்கு பணியாற்றிய எஸ்.ஐ.யை பொதுமக்களில் ஒருவர் அடித்துவிட்டாராம். இதற்கு காரணம் இசக்கிதான் என மேலிடத்திற்கு புகார் சென்றதால் அவரை எஸ்.பி. சஸ்பெண்ட் செய்துள்ளார். மீண்டும் பணிக்கு வந்த அவர் வேறு ஊருக்கு மாறுதலாகி சென்றுள்ளார். இசக்கி பணியின்போது போதையில் தான் இருப்பாராம். மேலும் பல குற்றசாட்டுக்கள் அவர் மீது இருந்துள்ளது. கடைசியாக மதுவால்தான் அவருடைய வாழ்க்கையும் முடிந்துள்ளது.
கடந்த ஒரு வாரத்திற்கு முன் போதையில் சுரண்டை காவல் நிலையம் சென்ற ஏட்டு சண்முகராஜா அங்கு பணியில் இருந்த இசக்கியுடன் கடுமையாக வாக்குவாதம் செய்தார். இங்கு நல்ல வருமானம் பார்த்து ராஜா மாதிரி இருந்த என்னை உன்னால் தான் மாற்றிவிட்டனர். இப்போது ஒன்றும் இல்லாமல் இருக்கிறேன். இதற் குகாரணமான உன்னை கொல்லாமல் விடமாட்டேன் என்று கூறி அடிக்க பாய்ந்துள்ளார். அப்போது காவல் நிலையத்திற்கு புகார் கொடுக்க வந்த பொதுமக்கள் முன்னிலையில் இருவரும் கட்டி புரண்டு சண்டை போட்டுள்ளனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து தனது உயிருக்கு ஆபத்து ஏற்படும் என கருதிய இசக்கி 4 நாள் லீவு போ்ட்டுவிட்டு ஊரில் இருந்துள்ளார்.
இசக்கியை பலி தீர்க்க வேண்டும் என்ற வெறியில் இருந்த ஏட்டு சண்முகராஜா நேற்று சுத்தமல்லிக்கு வேலைக்கு சென்றார். ஆனால் அவரை பத்தமடையில் டூட்டி பார்க்க அனுப்பிவிட்டனர். அவர் அங்கு செல்லாமல் கோட்டையூருக்கு சென்று பூனிபார்மை கழற்றி வைத்துவிட்டு மப்டியில் மாலை 4 மணிக்கு சுரண்டை சென்றார். அங்கு இருந்த போலீஸ்காரரிடம் எஸ்.ஐ. இசக்கி மற்றும் எஸ்.பி., ஏட்டு ஆகியோர் இருக்கிறார்களா என கேட்டுள்ளார். அவர் இல்லையென்றவுடன் போலீசார் தங்கியிருந்த அறைக்கு சென்றார். அங்கு கதவை பூட்டிக் கொண்டு உள்ளே இசக்கி இருப்பதை அறிந்த சண்முகராஜா குரலை மாற்றி உங்களை ஸ்டேஷனில் கூப்பிடுகிறார்கள், கதவை திறங்கள் என்று கூறவே போலீஸ் உடையை மாற்றிக் கொண்டிருந்த இசக்கி கதவை திறந்தார். உள்ளே புகுந்த சண்முகராஜா கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இருவரும் கட்டி புரண்டு சண்டை போட்டுள்ளனர். அப்போது சண்முகராஜா தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் இசக்கியை குத்திவிட்டு கதவை பூட்டி விட்டு தப்பியோடிவிட்டார்.