ரயில் விபத்து: ஜெயலலிதா இரங்கல்- நெல்லூர் விரைந்த மூத்த அமைச்சர்கள், அதிகாரிகள்

தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில் சனிக்கிழமை இரவு 10 மணிக்கு டெல்லியில் இருந்து புறப்பட்டது. இன்று அதிகாலை 4.30 மணிக்கு நெல்லூர் ரயில் நிலையத்தை இந்த ரயில் வந்தடைந்தது. நெல்லூர் ரயில் நிலையத்தில் இருந்து சென்னை நோக்கி புறப்பட்ட சில நிமிடங்களிலேயே எஸ் 11 என்ற கோச்சில் தீ மளமளவென கொழுந்து விட்டு எரிந்தது. அப்போது பயணிகள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கப் போராடினர். இந்த விபத்தில் 50 பேர் பலியாகியுள்ளனர். மேலும் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
இதற்கிடையே விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தாருக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா, தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆகியோர் தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளனர். விபத்தில் பாதிக்கப்பட்டவர்களில் பலர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களின் குடும்பத்தாரை சந்தித்து ஆறுதல் கூற நெல்லூருக்கு செல்லுமாறு மூத்த அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகளுக்கு ஜெயலலிதா உத்தரவிட்டார். இதையடுத்து அவர்கள் நெல்லூர் விரைந்துள்ளனர்.
இந்த விபத்தில் பலியான தமிழகத்தைச் சேர்ந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.25,000 வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளனார்.












Click it and Unblock the Notifications