வீட்டில் தனியாக இருந்த நர்ஸ் கழுத்து அறுத்து கொலை
சென்னை: கொடுங்கையூரில் பட்டப்பகலில் வீட்டில் தனியாக இருந்த நர்ஸ் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கொடுங்கையூர் கிருஷ்ணமூர்த்தி நகரில் உள்ள அம்பேத்கர் தெருவைச் சேர்ந்தவர் முனுசாமி (35). அவர் தி.நகரில் உள்ள தனியார் கட்டுமான நிறுவனத்தில் பணி புரிகிறார். அவரது மனைவி சுமதி (33). கொடுங்கையூரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் நர்சாக இருந்தார். அவர்களுக்கு மகாலட்சுமி (16), காமாட்சி (14) என்ற மகள்கள் உள்ளனர். அதில் மகாலெட்சுமி பிளஸ் 2வும், காமாட்சி 10ம் வகுப்பும் படிக்கின்றனர்.
நேற்று காலை மகள்கள் இருவரும் பள்ளிக்கு சென்றுவிட்டனர். முனுசாமி அலுவலகத்திற்கும், சுமதி மருத்துவமனைக்கும் சென்றனர். பிற்பகல் 2 மணிக்கு சுமதி வீடு திரும்பினார். அடுத்த தெருவைச் சேர்ந்த சாந்தி என்ற பெண் சுமதியிடம் வந்து தினமும் சர்க்கரை நோய்க்காக ஊசி போட்டுக் கொள்வார். நேற்றும் அவர் ஊசி போட்டுக்கொள்ள சுமதி வீட்டுக்கு சென்றார்.
அப்போது சுமதியின் வீட்டு கதவு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது அவர் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த சாந்தி அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடினார். அவரது சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் கூடினர். அதற்குள் முனுசாமியும் அங்கு வந்து சேர்ந்தார்.
இது குறித்து கொடுங்கையூர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்தவுடன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். சுமதியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சுமதி அணிந்திருந்த நகைகள் மற்றும் வீட்டு பீரோவில் இருந்த நகை, பணம் ஆகியவை திருடு போகவில்லை. அதனால் நகை, பணத்தை திருட இந்த கொலை நடக்கவில்லை என்பது உறுதியாகியுள்ளது.
கொலையாளிகளைப் பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. சுமதி மதியம் வீட்டுக்கு வருவதற்கு முன்பு முனுசாமி வந்துவிட்டு சென்றதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். இதையடுத்து முனுசாமியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் கணவன்-மனைவி இடையே தகராறு ஏதும் உள்ளதா என்று மகாலெட்சுமி மற்றும் காமாட்சியிடம் விசாரணை நடத்தப்பட்டது.












Click it and Unblock the Notifications