வறண்ட காவிரி.. 'பம்ப் செட்' காவிரியில் ஆடிப்பெருக்கு கொண்டாடிய மக்கள்!

Subscribe to Oneindia Tamil

Trichy Cauvery River
திருச்சி : ஆடிப்பெருக்கு தினத்தை ஒட்டி திருச்சி அம்மாமண்டபம் காவிரிக்கரையில் அமைக்கப்பட்டிருந்த ஆழ்துளைக்கிணற்றில் நீராடிய புதுமணத்தம்பதிகள் வாழ்வு செழிக்க காவிரித்தாயை வழிபட்டனர்.

விவசாயத்தை வளமாக்கி வாழ்வை செழிக்க வைக்கும் காவிரித்தாய்க்கு நன்றி செலுத்தும் விதமாக ஆண்டுதோறும் ஆடிமாதம் 18ம் நாள் ஆடிப்பெருக்கு கொண்டாடப்படுகிறது.

நீர் நிலைகளுக்கு நன்றி செலுத்தும் விழாவாக தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் நடந்தாலும், காவிரி ஆறு பாயும் திருச்சி, தஞ்சை, நாகை, திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் உற்சாகத்துடன் கொண்டாடப்படுவது வாடிக்கை.

இந்த ஆண்டு பருவ மழை பொய்த்து விட்டதால் காவிரி ஆறு வறண்டு காணப்படுகிறது. இருப்பினும் காவிரியில் கூடும் பக்தர்களின் குறையை போக்கும் வகையில் திருச்சி மாநகராட்சி சார்பில் ஆழ்துளை கிணறுகள் மூலம் செயற்கை நீரூற்றுகள் அமைக்கப்பட்டு இருந்தன. இன்றைய தினம் ஆடிப்பெருக்கை முன்னிட்டு அதிகாலையில் திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் ஏராளமானோர் குவிந்தனர்.

காவிரிக்கரையில் கூடிய மக்கள் நீராடி, புத்தாடைகள் அணிந்து, படித்து றையில் வாழை இலை போட்டு காவிரி தாய்க்கு காப்பரிசி, பழவகைகள், காதோலை கருகமணி, மஞ்சள் கயிறு உள்ளிட்ட மங்கலப் பொருட்களை படையிலிட்டு கற்பூரதீபம் காட்டி வழிபட்டனர். புதுமணத்தம்பதிகள் தங்கள் வாழ்வில் வளமும், நலமும் பெருக வேண்டும் என பிரார்த்தனை செய்து திருமண நாளில் தாங்கள் அணிந்திருந்த மணமாலைகளை காவிரி ஆற்றில் விட்டனர்.

சுமங்கலி பெண்கள் தங்கள் மாங்கல்ய மஞ்சள் கயிறுகளை புதுப்பித்து அணிந்து கொண்டனர். மேலும் ஆண்களும் இந்த வழி பாட்டில் கலந்து கொண்டு காவிரி தாயை வேண்டி கையில் மஞ்சள் கயிறுகளை கட்டிக் கொண்டனர். பொங்கிவரும் காவிரி இல்லாமல் இந்த ஆண்டு ஆழ்துளை கிணறு நீரில் வந்த காவிரியில் குளித்ததால் ஆடிப்பெருக்கு பண்டிகையின் உற்சாகம் சற்று குறைவாகவே காணப்பட்டது.

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோவிலில் ஆடிப்பெருக்கு திருவிழாவை முன்னிட்டு ஸ்ரீநம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து காலை 6 மணிக்கு புறப்பட்டு 11.30 மணிக்கு அம்மா மண்டபம் ஆஸ்தான மண்டபத்திற்கு எழுந்தருளினார். இரவு 8.30 மணிக்கு அம்மா மண்டபத்தில் இருந்து புறப்பட்டு வெளி ஆண்டாள் சன்னதியில் மாலை மாற்றிக்கொண்டு இரவு 9.30 மணிக்கு மூலஸ் தானம் எழுந்தருளுகிறார்.

ஆடிப்பெருக்கை முன்னிட்டு காவிரி ஆற்றின் அம்மாமண்டபம் படித்துறை மற்றும் ஸ்ரீரங்கம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 6 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+