தூத்துக்குடியில் வறுமையால் மகன், மகளுடன் தூக்கில் தொங்கிய தம்பதி
தூத்துக்குடி: ஏரல் அருகே வறுமையின் கொடுமை தாங்க முடியாமல் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள கோட்டைகாடைச் சேர்ந்தவர் ஜெகன். அவரது மனைவி சரஸ்வதி. அவர்களின் மகள் தர்ஷினி திருச்செந்தூரில் உள்ள பள்ளியில் 9ம் வகுப்பும், மகன் விஜேயந்திரன் ஏரல் பள்ளியில் 6ம் வகுப்பும் படித்து வந்தனர்.
ஜெகன் கோவையில் மளிகைக் கடை நடத்தி வந்தார். வியாபாரத்தில் நஷ்டம் ஏற்படவே கடந்த ஒரு வருடத்திற்கு முன் குடும்பத்துடன் கோட்டைகாடு வந்தார். ஏரலில் உள்ள ஜவுளிக்கடை ஒன்றில் வேலைக்கு சேர்ந்தார். சில மாதங்களில் வேலையில் இருந்து நின்றுவிட்டார். கடந்த 6 மாதமாக வேலையில்லாமல் ஊரைச் சுற்றி வந்தார். இதனால் குடும்பம் வறுமையில் வாடியது.
இந்நிலையில் கடந்த 4 மாதங்களுக்கு முன் ஜெகன் தனது கூட்டாளியுடன் சேர்ந்து குரங்கணி பஞ்சாயத்து தலைவி ஜெயலட்சுமியின் கழுத்தில் கிடந்த சங்கிலியை பறித்துக் கொண்டு பைக்கில் தப்ப முயன்றபோது இருவரையும் பொதுமக்கள் பிடித்து ஆழ்வார்திருநகரி போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கடந்த 2 மாதங்களுக்கு முன்பு வெளியில் வந்த ஜெகன் வேலை தேடி அலைந்தார். ஆனால் நகை பறிப்பு வழக்கில் சிறைக்கு சென்றதால் அவருக்கு யாரும் வேலை கொடுக்க முன்வரவில்லை. இதனால் மனமுடைந்த அவர் வீட்டில் உள்ள பொருட்களை விற்று மது குடித்தார். அவரின் போக்கால் குடும்பத்தினர் சாப்பாட்டுக்கே வழியின்றி தவித்தனர். இந்நிலையில் நகை பறிப்பு வழக்கில் வாய்தாவுக்காக அவர் நீதிமன்றத்திற்கு செல்லாததால் ஆழ்வார்திருநகரி போலீசார் நேற்று அவரது உறவினர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு விசாரித்தனர்.
இதையடுத்து உறவினர்கள் சிலர் நேற்று மாலை ஜெகன் வீட்டுக்கு சென்று பார்த்தபோது வீடு பூட்டிக் கிடந்தது. ஜன்னல் வழியாக உள்ளே பார்த்தபோது ஜெகன், அவரது மனைவி, மகள் தர்ஷினி, மகன் விஜேயந்திரன் ஆகியோர் தூக்கில் தொங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து ஏரல் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் கிடைத்தவுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அந்த 4 பேரின் உடல்களையும் கைப்பற்றி ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
வறுமையால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.












Click it and Unblock the Notifications