காணாமல் போன ஆர்எஸ்எஸ் மூத்த தலைவர் சுதர்ஷன் பத்திரமாக வீடு திரும்பினார்!
ஆர்எஸ்எஸ் அமைப்பின் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக 3 நாட்களுக்கு முன் மைசூருக்கு வந்த சுதர்ஷன் அவரது சகோதரர் ரமேஷின் வீட்டில் தங்கியிருந்தார்.
மைசூரில் உள்ள தனது சகோதரரின் இல்லத்தில் தங்கியிருந்த அவர் இன்று காலை 5 மணிக்கு நடை பயிற்சிக்காக வெளியே சென்றார். அப்போது அவரது பாதுகாவலர் பல் துலக்கி விட்டு வருவதாகக் கூறவே, சரி நான் நடக்கிறேன். நீங்கள் பின்னால் வாருங்கள் என்று கூறிவிட்டுச் சென்றார்.
ஆனால், அதன் பின்னர் அவரை அவரது பாதுகாவலரால் கண்டுபிடிக்க முடியவில்லை. பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்காததால் உடனடியாக காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது.
மைசூர் முழுக்க அவரைத் தேடும் பணியில் ஆயிரக்கணக்கான போலீசார் ஈடுபட்டனர். அதே போல நூற்றுக்கணக்கான ஆர்எஸ்எஸ் தொண்டர்களும் அவரைத் தேடினர்.
இந் நிலையில், மைசூரில் சாமுண்டி ஹில்ஸ் அருகே லலித் மகாலின் ஹெலிபேடுக்கு செல்லும் வழியில் ஒரு மரத்தடியில் அவர் அமர்ந்திருந்தது தெரியவந்தது.
81 வயதான சுதனர்சனத்துக்கு ஞாபக மறதி உண்டு. நெடுந்தூரம் நடந்ததில் களைப்படைந்த அவர், வீடு திரும்ப வழியும் தெரியாததால் மரத்தடியில் அமர்ந்தாகத் தெரிவித்துள்ளார்.
சுதர்ஷன் கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், இப்போது போபாலில் தான் வசித்து வருகிறார்.