குழந்தை நரபலி வழக்கு: தம்பதியருக்கு இரட்டை ஆயுள்-மதுரை நீதிமன்றம் உத்தரவு
மதுரை: குழந்தையை கடத்தி சென்று நரபலி கொடுத்த வழக்கில் முஸ்லீம் தம்பதியருக்கு இரட்டை ஆயுள் தண்டனை அளித்து மதுரை நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
மதுரை எஸ்.ஆலங்குளத்தைச் சேர்ந்தவர் ஷெரீன் பாத்திமா. கடந்த 2010 ஜூலை 2ம் தேதி இவரது ஒன்றரை வயது ஆண் குழந்தை காதர் யூசுப் உடன், மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள தர்காவில் தங்கியிருந்தார். அப்போது குழந்தை காதர் யூசுப், மர்மநபர்களால் கடத்தப்பட்டது.
இது குறித்து ஷெரீன் பாத்திமா அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். இதில் தர்காவில் தங்கியிருந்த தூத்துக்குடி காயல்பட்டினத்தை சேர்ந்த அப்துல் கபூர், அவரது துணைவியார் ரமலா பீவி ஆகியோர் குழந்தை காதர் யூசுப்பை கடத்தி சென்றது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்து விசாரித்தனர்.
விசாரணையில் தூத்துக்குடி, காயல்பட்டினம் முத்தையாபுரத்தை சேர்ந்தவர் அப்துல்கபூர்(30). அவர் மனைவியை விவாகரத்து செய்தவர். ஏர்வாடி காட்டுப்பள்ளிவாசல் தர்காவில் தங்கி, சமையல் வேலை செய்தார். இந்த நிலையில் இவருக்கும், தர்காவில் தங்கியிருந்த ரமீலா பீவிக்கும்(28) பழக்கம் ஏற்பட்டதாம். கணவரை விவகாரத்து செய்த ரமீலா பீவி உடன் அப்துல்கபீர், கணவன்-மனைவி போல வாழ்ந்து வந்துள்ளனர்.
இந்த நிலையில் ரமீலா பீவிக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதை குணப்படுத்த குழந்தையை நரபலி கொடுக்க வேண்டும் என்று சிலர் கூறியுள்ளனர். அதற்காக இருவரும் குழந்தையை தேடியுள்ளனர். அப்போது மதுரை எஸ்.ஆலங்குளம் கோவலன் தெருவை சேர்ந்த கவுகர் பாட்ஷாவின் மனைவி ஷெரின் பாத்திமா. குழந்தையுடன் தர்காவிற்கு வந்து தங்கியுள்ளார்.
அதை கண்ட ரமீலா பீவி, அப்துல்கபீர் ஜோடி, குழந்தையை கடத்தி சென்று, திருச்செந்தூர் அருகே நரபலி கொடுத்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
இந்த வழக்கை விசாரித்த மதுரை மாவட்ட அமர்வு நீதிமன்றம் இன்று பரபரப்பு தீர்ப்பு அளித்தது. இதில் குழந்தையை கடத்தியதற்காக அப்துல் கபூர், ரமீலாவிற்கு ஆயுள் தண்டனை, கொலை செய்ததற்காக இருவருக்கும் மற்றொரு ஆயுள் தண்டனையும், தடயங்களை மறைத்ததற்காக இருவருக்கும் தலா 7 ஆண்டு கடுங்காவல் தண்டனை, தலா ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டார். மேலும் தண்டனையை ஒன்றன்பின் ஒன்றாக அனுபவிக்க உத்தரவிட்டார்.