'காந்தி சொன்னதையே மாணவி செய்துள்ளார்'.. கற்பை காக்க தந்தையை கொன்ற மகள் மீதான வழக்கு ரத்து
சென்னை: தன் கற்பை பாதுகாக்க வேறு வழியின்றி தந்தையை குத்திக்கொன்ற மகள் மீதான வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.
கற்பை பாதுகாக்க மகாத்மா காந்தி சொன்னதைத்தான் அந்த மகள் செய்துள்ளார். அவர் எந்த குற்றமும் செய்யவில்லை என்றும் தீர்ப்பில் நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.
சென்னை அடுத்துள்ள மாங்காட்டை சேர்ந்தவர் அனுராதா (வயது 19). (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இவர் கல்லூரியில் பி.எஸ்சி. படித்து வந்தார். இவரது தாய் 4 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால் அண்ணன் மற்றும் தந்தையுடன் வசித்து வந்தார்.
இந்நிலையில் கடந்த ஆண்டு மே மாதம் ஒரு நாள் இரவு வீட்டில் அனுராதா தனியாக இருந்தார். அப்போது அவரது தந்தை குடிபோதையில் வீட்டுக்கு வந்துள்ளார். நள்ளிரவு 1 மணியளவில் தூங்கிக் கொண்டிருந்த அனுராதாவை அவரது தந்தை கத்திமுனையில் மிருகத்தனமாக கற்பழிக்க முயற்சி செய்தார்.
அப்போது தன் கற்பை காப்பாற்ற அருகில் கிடந்த கத்தியை எடுத்து தந்தையின் வயிற்றில் அனுராதா குத்தினார். இதில் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்து தந்தை இறந்தார். இதுகுறித்து, வேலைக்கு சென்று இருந்த தன் சகோதரருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து சகோதரர் கொடுத்த புகாரின் அடிப்படையில், மாங்காடு போலீசார் அனுராதா மீது, உள்நோக்கம் இல்லாமல் கொலை சம்பவத்தை விளைவித்தல் (இந்திய தண்டனை சட்டம் 304(2) கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
இதையடுத்து இந்த வழக்கின் குற்றப்பத்திரிகையை, ஸ்ரீபெரும்புதுவர் குற்றவியல் நீதிமன்றத்தில் போலீசார் தாக்கல் செய்தனர்.
இந்த நிலையில் தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் அனுராதா மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிபதி நாகமுத்து விசாரித்து வழங்கிய தீர்ப்பு:
தன் உயிரையும், கற்பையும் பாதுகாக்க இறைவன் கொடுத்த நகம் மற்றும் பற்களை பயன்படுத்தி பெண்கள் தன்னை பாதுகாத்துக்கொள்ளவேண்டும் என்று மகாத்மா காந்தி கூறியுள்ளார். அதுபோல, கற்பை காப்பாற்றிக் கொள்ள தன்னை கற்பழிக்க வந்த மிருகமான தந்தையை மனுதாரர் கத்தியால் குத்திக்கொலை செய்துள்ளார்.
இந்த வழக்கில் மனுதாரர் அனுராதாவுக்கு எதிராக போலீசார் தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகை, சாட்சி வாக்குமூலம், ஆவணங்கள் ஆகியவற்றை பார்க்கும்போது, மனுதாரர் கத்திமுனையில் தன்னை கற்பழிக்க வந்தவரிடம் இருந்து தன்னை பாதுகாத்துள்ளார் என்று நிரூபணமாகியுள்ளது.
இது குற்றமில்லை
எனவே, இவர் மீதான குற்ற விசாரணை தேவையில்லாதது. இவருக்கு எதிராக வழக்கு விசாரணை நடந்தால், அது மனித உரிமை மீறலாகும். எனவே மனுதாரர் எந்த குற்றமும் செய்யவில்லை என்று இந்த கோர்ட்டு முடிவு செய்கிறது.
கற்பை காப்பாற்ற வேண்டிய தந்தையே, மிருகத்தனமாக இதுபோல் நடந்து கொண்டால் , எந்த ஒரு பெண்ணும் தன்னை பாதுகாக்க இப்படித்தான் செயல்பட்டு இருப்பார். 80 ஆண்டுகளுக்கு முன்பு மகாத்மா காந்தி சொன்னதைத்தான், இப்போது அனுராதா செய்துள்ளார். ஒருவேளை, தந்தையை அனுராதா கொலை செய்யாமல் இருந்தால், அவர் கற்பழிப்பினால், பாதிக்கப்பட்டவராக இருந்திருப்பார்.
போலீசுக்கு பாராட்டு
இந்த வழக்கை விசாரித்த போலீஸ் இன்ஸ்பெக்டர் எம்.அழகு நேர்மையுடன் செயல்பட்டுள்ளார். அவர் அனுராதா மீது கொலை வழக்கு பிரிவின் கீழ் வழக்கை பதிவு செய்யாமல், உள்நோக்கம் இல்லாமல் கொலை சம்பவத்தை விளைவித்தார் என்ற பிரிவின் கீழ் வழக்கை பதிவு செய்துள்ளார். அவரது நடவடிக்கையை பாராட்டுகிறேன்.
அதேநேரம் மாணவியான இந்த பெண்ணின் வயது, படிப்பு ஆகியவற்றை கருத்தில் கொள்ளாமல், 40 நாட்கள் தேவையில்லாமல் சிறையில் இருக்க வைத்துள்ளார். என்றாலும், அனுராதா அதிர்ஷ்டவசமாக தன் படிப்பை பாதியில் விட்டுவிடாமல், தொடர்ந்து படித்து வருகிறார்.
வழக்கு ரத்து
இதுவரை அனுபவித்த துன்பத்தில் இருந்து விடுபடும் விதமாக, அனுராதா மீதான வழக்கை ரத்து செய்கிறேன். அவருக்கு எதிராக ஸ்ரீபெரும்புதூர் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் தாக்கல் செய்துள்ள குற்றப் பத்திரிகையையும் ரத்து செய்கிறேன்.
இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
மதுரையில்...
சில மாதங்களுக்கு முன் இதே போன்றதொரு சம்பவம் மதுரையில் நடந்தது. மகளின் கற்பைக் காக்க, தன் கணவனைக் கொன்ற மனைவி மீது வழக்கு கூட பதியாமல், விடுதலை செய்தார், அன்றைய மதுரை எஸ்பி அஸ்ரா கார்க். இது பரவலான பாராட்டைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.