தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் தீப்பிடித்ததற்கு பட்டாசு ரசாயனம் காரணமா?
ஹைதராபாத்: நெல்லூரில் தீப்பிடித்த தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து எடுத்த மாதிரிகளை ஆய்வு செய்ததில் அதில் பட்டாசுகளில் பயன்படுத்தப்படும் ரசாயனம் இருந்தது தெரிய வந்துள்ளது.
டெல்லியில் இருந்து சென்னைக்கு வந்த தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில் கடந்த 30ம் தேதி அதிகாலை ஆந்திர மாநிலம் நெல்லூரில் தீப்பிடித்து எரிந்தது. இந்த விபத்தில் 30 பேர் உடல் கருகி பலியாகினர். மேலும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 2 பேர் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தனர். இதையடுத்து பலி எண்ணிக்கை 32க உயர்ந்தது. இந்த விபத்துக்கான காரணம் சரியாகத் தெரியவில்லை. இந்நிலையில் அண்மையில் திருப்பதியில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய ரயில்வே இணையமைச்சர் முனியப்பா, ரயில் விபத்துக்கு சமூக விரோதிகளின் சதி காரணமாக இருக்கலாம் என்றார்.
இதற்கிடையே ரயிலில் இருந்து எடுத்த மாதிரிகள் ஆந்திராவில் உள்ள தடயவில் அறிவியல் ஆய்வகத்தில் ஆய்வு செய்ய அனுப்பி வைக்கப்பட்டது. ஆய்வு முடிவு குறித்து ஆய்வக இயக்குனர் ஓ. நாராயணமூர்த்தி செய்தியாளர்களிடம் கூறுகையில்,
தீப்பிடித்த தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து எடுக்கப்பட்ட மாதிரியை ஹைதராபாத்தில் உள்ள எங்கள் தடயவியல் நிபுணர் குழு பரிசோதனை செய்தது. பரிசோதனையின் முடிவில் ரயில் மாதிரியில் பட்டாசுகளில் பயன்படுத்தப்படும் ரசாயனம் இருந்தது தெரிய வந்தது. மேலும் சில ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. அதன் பிறகே விபத்துக்கான காரணத்தை உறுதியாக தெரிவிக்க முடியும் என்றார்.
ரயிலில் தீ பரவியபோது பயங்கர சத்தம் கேட்டதாக பயணிகள் தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் பல்வேறு ஆய்வுகள் செய்ய வேண்டி இருப்பதால் இறுதி அறிக்கை சமர்பிக்க குறைந்தது 1 மாதமாவது ஆகும் என்று ஆய்வக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மாதிரிகள் தவிர சம்பவ இடத்தில் கிடந்த லேப்டாப், சூட்கேஸ், செல்போன் மற்றும் 2 மணிபர்ஸ் ஆகியவற்றையும் தடயவியல் நிபுணர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications