ஆளும்கட்சி செய்ய வேண்டிய பணிகளை நாங்கள் செய்கிறோம்: பிரேமலதா

கோவில்பட்டியில் நகர தேமுதிக சார்பில் அரசு மருத்துவமனையை சுத்தப்படுத்தும் பணி நடந்தது. இதற்கு நகரச் செயலாளர் சண்முகராஜ் தலைமை வகித்தார். மருத்துவமனையை சுத்தப்படுத்தும் பணியை மாநில அணி பொறியாளர் சீனிவாசராகவன் தொடங்கி வைத்தார். கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் வார்டுகள், மருத்துவமனை வளாகத்தில் இருந்த குப்பைகள் மற்றும் களைகளை அகற்றி சுத்தப்படுத்தினர்.
பணிகளை தேமுதிக தலைவர் விஜயகாந்த் மனைவி பிரேமலதா பார்வையிட்டார்.
பின்னர் அவர் கூறுகையில்,
தமிழக அரசு செய்ய வேண்டிய பணிகளை தேமுதிக தலைவர் செய்து வருகிறார். முதலில் திண்டுக்கல், விருதுநகர், தேனி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் பல்வேறு சமுதாயப் பணிகளை செய்தோம். தற்போது கோவில்பட்டி அரசு மருத்துவமனையை கட்சி நிர்வாகிகள் சுத்தம் செய்தனர். இங்குள்ள குழந்தைகள் வார்டில் உள்ள பெண்களுக்கு ரொட்டிகள், குழந்தைகளுக்கு விளையாட்டுப் பொருட்கள், சோப், பவுடர் வழங்கி உள்ளோம். மக்களுக்காக மக்கள் பணி என்னும் திட்டத்தின் கீழ் 60 திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறோம். இந்த மருத்துவமனைக்கு சுவிட்ச் பாக்ஸ் வழங்கியுள்ளோம். மேலும் நோயாளிகளுக்கு வெந்நீர் வேண்டும் என தெரிவித்தனர். அவர்களி்ன் கோரிக்கையை ஏற்று விரைவில் சோலார் வாட்டார் ஹீட்டர் வாங்கித் தர உள்ளோம்.
ஆளும் கட்சியினர் செய்ய தவறிய பணிகளை நாங்கள் செய்து வருகிறோம். எத்தனை தடைகள் வந்தாலும் நாங்கள் தொடர்ந்து மக்கள் பணி செய்வோம் என்றார்.












Click it and Unblock the Notifications