ஈரல், சிறுநீரகக் கோளாறு: மத்திய அமைச்சர் விலாஸ்ராவ் தேஷ்முக் சென்னை மருத்துவமனையில் அனுமதி
மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் விலாஸ்ராவ் தேஷ்முக்கிற்கு(67) ஈரல் கோளாறு இருந்தது கடந்த ஆண்டு கண்டிபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்த்து அவருக்கு ஈரல் மாற்று அறுவை சிகிச்சை செய்வது குறித்து அவரது குடும்பத்தினர் ஆலோசித்து வந்தனர். இந்நிலையில் கடந்த வாரம் அவரது உடல் நிலை பாதிக்கப்பட்டதால் மும்பையில் உள்ள பிரீச் கேன்டி மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அப்போது செய்யப்பட்ட மருத்துவ பரிசோதனையில் அவரது இரண்டு சிறுநீரகங்களும் முழுமையாக செயல் இழந்துவிட்டன என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவருக்கு 3 நாட்கள் டயாலிசிஸ் செய்யப்பட்டது. அப்படி இருந்தும் நேற்று அவரது உடல்நிலை மோசமானதால் தனி விமானம் மூலம் மாலையே சென்னைக்கு கொண்டு வரப்பட்டு அங்குள்ள குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அங்கு அவருக்கு செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டுள்ளது. அவருக்கு தனது ஈரலில் ஒரு பகுதியைத் தர அவரது மகனும், நடிகருமான ரித்தேஷ் தேஷ்முக் தயாராக இருப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால் அதற்கு அவர்களின் திசுக்கள் ஒத்துப்போக வேண்டும். முதலில் அறுவை சிகிச்சையை தாங்கும் அளவுக்கு விலாஸ்ராவ் தேற வேண்டும் என்று மருத்துவர் ஒருவர் தெரிவித்தார்.
மும்பையில் வைத்து ஈரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய தேஷ்முக் குடும்பத்தார் மறுத்துவிட்டனர். அவர்களுக்கு சென்னை மருத்துவமனையில் வைத்து அறுவை சிகிச்சை செய்வது தான் சிறந்தது என்று தோன்றியுள்ளது என்று மும்பை மருத்துவர் ஒருவர் தெரிவித்தார்.