சென்ட்ரல் ரயில் நிலைய மணிக்கூண்டில் ஏறி 4 மணிநேரம் ஆட்டம்காட்டிய வாலிபர்
சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய மணிக்கூண்டு கோபுரத்தில் ஏறிக் கொண்டு தற்கொலை செய்யப்போவதாக மிரட்டிய வாலிபர் 4 மணிநேர போராட்டத்திற்குப் பிறகு மீட்கப்பட்டார்.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நாலாபக்கத்தில் இருந்து பார்த்தாலும் தெரியும் வகையில் கடிகாரம் உள்ளது. அந்த கடிகாரத்திற்கு 2 நாட்களுக்கு ஒரு முறை சாவி கொடுக்கப்படுகிறது. அவ்வாறு சாவி கொடுக்க 4 கதவுகளையும் திறந்து செல்ல வேண்டும். அந்த கதவில் ஒன்று திறந்து கிடந்துள்ளது. இந்நிலையில் நேற்று பிற்பகல் 2 மணியளவில் வாலிபர் ஒருவர் அந்த கதவின் வழியாக மணிக்கூண்டு கோபுரத்தின் உச்சிக்கு சென்றார்.
இது குறித்து தகவல் அறிந்த ரயில்வே போலீசார் அங்கு வந்து கோபுரத்தின் உச்சிக்கு செல்ல முயன்றனர். ஆனால் அந்த வாலிபர் போலீசாரை இரும்புக் கம்பியாலும், பெயர்ந்திருந்த காரைகளைக் கொண்டும் தாக்கினார். இதற்கிடையே அங்கு பெரும் கூட்டம் கூடிவிட்டது. தன்னருகே வந்தால் தற்கொலை செய்து கொள்வேன் என்று அந்த வாலிபர் மிரட்டினார்.
இதையடுத்து அவரை சமாதானப்படுத்தி கீழே இறக்க முயன்றனர். அப்போது பிரியாணி கொடுத்தால் வந்துவிடுவாயா என்று போலீசார் கேட்டதற்கு சரி என்று கூறினார். இதையடுத்து பிரியாணி வாங்கிக் கொடுத்தனர். ஆனால் அந்த வாலிபரோ பிரியாணியை சாப்பிட்டுவிட்டு இதில் லெக் பீஸே இல்லை என்றார். சாப்பிட்டு முடித்தும் அவர் கீழே இறங்கவில்லை. அவ்வளவு நேரமாக கோபுரத்தின் கதவில் அமர்ந்திருந்த அவர் அங்குள்ள 20 அடி உயர கொடிக்கம்பத்தில் ஏறினார். அதற்குள் வேப்பேரி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் ராட்சத கிரேனுடன் அங்கு வந்தனர்.
ராட்ச கிரேன் மூலம் வாலிபர் அருகே சென்ற தீயணைப்புத் துறையினர் அவரைத் தாஜா செய்தும் அவர் கீழே இறங்க மறுத்துவிட்டார். பின்னர் தீயணைப்பு வீரர் ஒருவர் கொடிக்கம்பத்தில் பாய்ந்து அந்த வாலிபரை மீட்டார்.
பிற்பகல் 2.30 மணிக்கு முதல் அவரிடம் போராடி இறுதியாக மாலை 6.30 மணிக்கு அவரை பத்திரமாக மீட்டனர். 4 மணிநேரமாக நடந்த போராட்டத்தை பொதுமக்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். அந்த வாலிபர் கீழே வந்ததும் பொது மக்கள் அவரைத் தாக்க முயன்றனர். இதையடுத்து போலீசார் லேசான தடியடி நடத்தி அவர்களை கலைந்து போகச் செய்தனர்.
பின்னர் அந்த வாலிபரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். தொடர்ந்து அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் நேபாளத்தைச் சேர்ந்தவர் என்றும், அவரது பெயர் தீபக்(25) என்றும், அவருக்கு சீதா(22) என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர் என்றும் தெரிய வந்தது. ஒரு கொலை வழக்கு தொடர்பாக எதிரி கும்பல் தன்னை கொல்லத் துரத்தியதாகவும், அவர்களிடம் இருந்து தப்பிக்கவே மணிக்கூண்டில் ஏறியதாகவும் அவர் தெரிவித்தார்.
அவர் தெரிவித்ததெல்லாம் உண்மையா என்பதை அறிய அவருக்கு கீழ்பாக்கம் மனநல மருத்துவமனையில் பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனை முடிவுகளைப் பார்த்துவிட்டு தான் அடுத்த கட்ட விசாரணை நடத்தப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications