கருப்பர் இனத்தவருடன் காதல்-உறவு... மகளை கடுமையாகத் தாக்கிய பெற்றோருக்கு சிறை!
லண்டன்: இங்கிலாந்தில், கருப்பர் இனத்தைச் சேர்ந்த வாலிபருடன் படுக்கை அறையில் மகளைப் பார்த்து ஆத்திரமடைந்த பெண்ணின் பெற்றோர் இருவரையும் தாறுமாறாக போட்டு அடித்தனர். கருப்பர் இனத்தவருடன் உறவு கொண்டு குடும்பக் கெளரவத்தை கெடுத்து விட்டாயே என்றும் கூறி மகளை அடித்துள்ளனர். மகளின் காதலரையும் அடித்தனர். இதையடுத்து பெற்றோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
வேல்ஸ், ஸ்வான்சீ நகரில் தான் இந்தக் கூத்து நடந்துள்ளது. அங்கு வசித்து வருபவர் 50 வயதான டேவிட் சாம்பியன். இவரது மனைவி பெயர் பிரான்சஸ் சாம்பியன். இவர்களின் மகள் ஜேன் சாம்பியன். 17 வயதாகிறது.
ஒரு நாள் தனது பெற்றோர் வெளியே போன பின்னர் தனது காதலரான அல்போன்ஸ் நெகுபேயை வீட்டுக்கு வரவழைத்தார் ஜேன். நெகுபே கருப்பர் இனத்தவர் ஆவார்.
வீட்டில் இருவரும் தனிமையில் இருந்துள்ளனர். இந்த நேரம் பார்த்து சாம்பியன் தம்பதிகள் வீட்டுக்குத் திரும்பினர். வீட்டில் தங்களது மகள் நிர்வாண நிலையில், கருப்பர் இனத்தவரைச் சேர்ந்த பாய் பிரண்டுடன் இருப்பதைப் பார்த்துக் கோபமடைந்தனர்.
இதையடுத்து தந்தை டேவிட், கோபத்துடன் மகளின் தலைமுடியைப் பிடித்து இழுத்து சரமாரியாக அடித்துள்ளார். தாயாரும் சேர்ந்து அடித்துள்ளார். இதைத் தடுக்க வந்த அல்போன்ஸையும் டேவிட் அடித்து உதைத்து வீட்டை விட்டு வெளியேற்றினார்.
கருப்பர் இனத்தவருடன் உறவு வைத்து குடும்பக் கெளரவத்தைக் கெடுத்து விட்டாயே என்றும் ஜேனை திட்டியுள்ளார் டேவிட். நெகுபேயைப் பார்த்தும் இனவெறி கருத்துக்களைக் கூறியுள்ளார்.
பெற்றோர் கோபமாக இருந்ததால் ஜேன் வீட்டை விட்டு வெளியேறி தனது பாட்டி வீட்டுக்குப் போனார். சில நாட்கள் கழித்து மீண்டும் வீடு திரும்பினார். இந்த நிலையில், சமீபத்தில், டேவிடும், அவரது மனைவியும் பப்புக்குப் போய் விட்டு வீடு திரும்பினர். வீடு திரும்பியதும் மகளிடம் விசாரணையைத் தொடங்கினர். இன்னும் நெகுபேயுடன் காதலில் இருக்கிறாயா, சந்திக்கிறாயா என்று கேட்டுள்ளனர்.
அதற்கு ஜேன் ஆம் என்று கூறவே கோபமடைந்து ஜேன் முகத்தில் குத்து விட்டுள்ளார் டேவிடின் மனைவி. இதில் ஜேனின் இடது கண்ணில் காயம் ஏற்பட்டுள்ளது. அப்படியும் விடாத டேவிடின் மனைவி தொடர்ந்து தனது மகளை சரமாரியாக அடித்துள்ளார். கழுத்தைப் பிடித்து நெரிக்கவும் முயன்றுள்ளார்.
இதில் ஜேனின் முகத்தில் ரத்தக் காயம் ஏற்பட்டது. தலையிலும் காயம் ஏற்பட்டது. கோபம் தீராத டேவிடும், அவரது மனைவியும் நெகுபே வேலை பார்த்து வந்த ரெஸ்டாரென்ட்டுக்குப் போனார். அங்கு அவரை அங்கிருந்த ஊழியர்கள் தடுத்து நிறுத்தினர். ஆனாலும் கோபம் தணியாத டேவிடின் மனைவி, ஹோட்டல் கண்ணாடி ஜன்னல் மீது காலால் உதைத்து கோபத்தை வெளிப்படுத்தினார்.
இதையடுத்து டேவிட் மற்றும் அவரது மனைவி மீது போலீஸார் வழக்குத் தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி பீட்டர் ஹேவுட், டேவிட் தம்பதியரின் செயலையும், நெகுபே குறித்து இனவெறி கருத்துக்களைக் கூறியதற்கும் கடும் கண்டனம் தெரிவித்தார். அவர்களின் செயல் இழிவானது என்றும் விமர்சித்தார். மிகவும் காட்டுமிராண்டித்தனமாக டேவிடும், அவரது மனைவியும் பேசியுள்ளதாக நீதிபதி தெரிவித்தார்.
இதையடுத்து டேவிட் சாம்பியனுக்கு 12 மாத சிறைத் தண்டனையும், அவரது மனைவிக்கு 9 மாத சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது.
இதில் விசேஷம் என்னவென்றால் நெகுபேவுக்கு ஏற்கனவே கல்யாணமாகி விட்டது என்பதுதான். நெகுபே ஜிம்பாப்வேயைச் சேர்ந்தவர். ஆனால் 8 வயதாக இருக்கும்போதே அவர் இங்கிலாந்து வந்து செட்டிலாகி விட்டார்.
இதற்கிடையே, டேவிட் மற்றும் அவரது மனைவியின் உறவினர்கள் சமாதானப் பேச்சுக்களில் இறங்கியுள்ளனர். டேவிட் தம்பதியும், ஜேனும் மீண்டும் சேர வேண்டும் என்பதே தங்களது விருப்பம் என்று அவர்கள் கூறியுள்ளனர்.