விலாஸ்ராவ் தேஷ்முக் தொடர்ந்து கவலைக்கிடம்: இலாகா வயலார் ரவியிடம் ஒப்படைப்பு
சென்னை: கல்லீரல் புற்றுநோய் மற்றும் சிறுநீரக செயலிழப்பு காரணமாக சென்னையில் உள்ள குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மத்திய அமைச்சர் விலாஸ்ராவ் தேஷ்முக்கின் நிலைமை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது. இந்நிலையில் அவரது இலாகா வெளிநாடுவாழ் இந்தியர் விவகாரத் துறை அமைச்சர் வயலார் ரவியிடம் ஒப்படைக்கப்பட்டது.
மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் விலாஸ்ராவ் தேஷ்முக் கல்லீரல் புற்றுநோயால் அவதிப்படுகிறார். இந்நிலையில் கடந்த வாரம் அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து மும்பையில் உள்ள பிரீச் கேன்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருடைய உறுப்புகளில் பல செயலழிந்தன. மேலும் இரண்டு சிறுநீரகங்களும் முற்றிலும் செயலழிந்தன. இதையடுத்து அவருக்கு 3 நாட்கள் டயாலிசிஸ் செய்யப்பட்டது.
இருப்பினும் அவரது உடல் நிலை மோசமானதால் நேற்று முன்தினம் மாலை மும்பையில் இருந்து விமானம் மூலம் சென்னை கொண்டு வரப்பட்டு அங்குள்ள குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிரசிகிச்சைப் பிரிவில் வைக்கப்பட்டுள்ள அவருக்கு செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டுள்ளது. அவரது உடல் நிலை தொடர்ந்து கவலைக்கிடமாகவே உள்ளது.
அவருக்கு தனது கல்லீரலில் ஒரு பகுதியைத் தருவதாக அவரது மகனும், பாலிவுட் நடிகருமான ரித்தேஷ் தேஷ்முக் தெரிவி்த்தார். ஆனால் அறுவை சிகிச்சையை தாங்கும் சக்தி விலாஸ்ராவுக்கு இல்லாததால் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அவரை குளோபல் மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் மும்பையில் இருந்து வந்துள்ள மருத்துவர்களும் 24 மணிநேரமும் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
மருத்துவமனையில் அவரது மனைவி வைஷாலி தேஷ்முக், மகன் ரித்தேஷ், மருமகள் ஜெனிலியா உள்ளிட்டோர் உள்ளனர். நேற்றைக்கு இன்று அவருடைய உடல் நிலை பரவாயில்லை என்று அவரது குடும்பத்தார் தெரிவித்தனர்.
அவருக்கு நெருக்கமான வட்டாரத்தார் கூறுகையில், விலாஸ்ராவின் உடல் நிலை சீராக உள்ளது. உடல் உறுப்புகள் செயல் இழந்துள்ளதால் உயிர் காக்கும் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. மருத்துவமனையில் சேர்த்ததைவிட தற்போது அவருடைய உடல் நிலையில் முன்னேற்றம் தெரிகிறது என்றனர்.
இதற்கிடையே மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சரான விலாஸ்ராவ் தேஷ்முக் கூடுதலாக வகித்து வந்த குறு, சிறு, நடுத்தர தொழில் துறை இந்தியர் விவகாரத் துறை அமைச்சர் வயலார் ரவியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications