100 நாள் வேலை திட்டத்தை கண்காணிக்க தனி அமைப்பு: ஜெயலலிதா

இந்தத் திட்டத்தில் பல முறைகேடுகள் நடந்து வருகின்றன. இதில் போலி பயணாளிகளைச் சேர்ப்பது, பயணாகளுக்குத் தரப்படும் ஊதியத்தில் ரூ. 30 வரை கமிஷன் அடிப்பது என லோக்கல் அரசியல்வாதிகள் பெரும் முறைகேடுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந் நிலையில் இதைக் கண்காணிக்க "தமிழ்நாடு சமூகத் தணிக்கைச் சங்கம்' என்ற அமைப்பை உருவாக்க ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இந்த அமைப்பில் 858 பேர் நியமிக்கப்படுவர்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் சிறப்புடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்தத் திட்டத்தின் கீழ் பணியாற்றும் ஒவ்வொருவருக்கும் நாளொன்றுக்கு வழங்கப்பட்டு வந்த ரூ.119 ஊதியத்தை ரூ.132 ஆக உயர்த்தி முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இந்தத் திட்டத்தின்கீழ், ஒவ்வோர் ஊராட்சியிலும் நடைபெறும் பணிகள், ஊராட்சிகள் மூலம் பணியாற்றுபவர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் ஆகியவற்றைத் தணிக்கை செய்யும் நோக்கில், "தமிழ்நாடு சமூகத் தணிக்கைச் சங்கம்' என்ற ஓர் அமைப்பை உருவாக்க முதல்வர் ஜெயலலிதா ஆணையிட்டுள்ளார்.
இந்த தணிக்கைச் சங்கத்தில் பணியாற்றுவதற்காக ஓர் இயக்குநர், 2 இணை இயக்குநர், ஓர் உதவி இயக்குநர், ஒரு சமூக தணிக்கை நிபுணர், 4 மாநிலக் குழுக் கண்காணிப்பாளர், 4 உதவிப் பணியாளர்கள், மாவட்ட மற்றும் மாநில அளவில் வள ஆதார அலுவலர் 44 பேர், மாவட்ட உதவிப் பணியாளர் 31 பேர், வட்டார வள ஆதார அலுவலர் 770 பேர் என மொத்தம் 858 புதிய பணியிடங்களை உருவாக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
பெயர் மாற்றம்: தமிழகத்திலுள்ள 12,524 ஊராட்சிகளில் ஒவ்வோர் ஊராட்சியிலும் பணியாற்றும் ஊராட்சி உதவியாளர் என்ற பணியிடத்தின் பெயரை ஊராட்சி செயலாளர் என்று பெயர் மாற்றம் செய்து அவர்களின் பணியின் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு அவர்களுக்கு காலமுறை ஊதியம் ரூ.2,500-ரூ.5 ஆயிரம் மற்றும் தரஊதியம் ரூ.500 உடன் சிறப்புப் படியாக மாதம் ரூ.500 வழங்க உத்தரவிடப்பட்டது.
இப்போது, கிராம ஊராட்சி செயலாளர்கள் தங்கள் பணிகளை சிறப்பாக செய்யும் வகையில் பணி நிமித்தமாக அவர்கள் பணிபுரியும் கிராம ஊராட்சிகளில் இருந்து சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்), உதவி இயக்குநர் (தணிக்கை), ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களுக்கு அடிக்கடி சென்று வர அவர்களுக்கு நிரந்தரப் பயணப்படியாக ரூ.300 வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
அதே போல தமிழகத்திலுள்ள அனைத்து கிராம குடியிருப்புகளில் வசிக்கும் மக்களுக்குத் தரமான குடிநீர் வழங்கும் வகையில் மின்மோட்டாரை இயக்கி மேல்நிலைத் தொட்டிகளில் தண்ணீரைச் சேமித்து, பின்னர் கிராம குடியிருப்புகளுக்கு பகிர்ந்து அளிக்கும் பணியை மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்குபவர்கள் செய்து வருகின்றனர்.
இந்தப் பணியின் தன்மையைக் கருத்தில் கொண்டு அவர்கள் பயனடையும் வகையில் முதல் முறையாக அவர்களுக்கு சிறப்புப் படியாக மாதத்துக்கு ரூ.200 வழங்கப்படும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications