நாகர்கோவிலில் மனைவியை வழியனுப்பி வைக்க வந்த ஆசிரியர் ரயிலில் பாய்ந்து தற்கொலை
நாகர்கோவில்: நாகர்கோவிலில் இன்று காலை ஆசிரியர் ஒருவர் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகர்கோவி்ல் கோட்டாறு சந்திப்பு ரயில் நிலையத்திலிருந்து சுமார் 1 கிலோ மீட்டர் தூரத்தில் ஒருவர் ரயிலில் அடிப்பட்டு இறந்து கிடப்பதாக ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து ரயில்வே இன்ஸ்பெக்டர் பால்ராஜ், சப்-இன்ஸ்பெக்ர் ராஜசுலோசனா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். இறந்து கிடந்தவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் இறந்து கிடந்தவர் குமரி மாவட்டம் நெய்யூர் அருகே உள்ள லட்சுமிபுரம் பகுதியைச் சேர்ந்த திலகர் என்பது தெரிய வந்தது. இது குறித்து அவரின் உறவினர்களுக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர். இறந்து போன திலகர் நெய்யூரில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியராக இருந்தார். தற்போது திருநெல்வேலி சங்கர்நகரில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியராக உள்ளார். அவருக்கு மல்லிகா என்ற மனைவி உள்ளார். அவரும் ஆசிரியை. அவர் தற்போது விருதுநகரில் பணியாற்றி வருகிறார்.
இன்று காலை தனது மனைவியை விருதுநகருக்கு அனுப்பி வைக்க திலகர் நாகர்கோவில் வந்தார். இந்த நிலையில்தான் அவர் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து இருக்கிறார். அவர் தற்கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். திலகரின் உடலை பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதேபோல் வள்ளியூர் அருகிலும் ஒருவர் ரயிலில் அடிபட்டு இறந்து கிடந்தார். இது குறித்து தகவல் அறிந்ததும் ரயில்வே சப்-இன்ஸ்பெக்டர் ஒளிமுத்து மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.












Click it and Unblock the Notifications