ஐடிஐ மாணவ, மாணவியருக்கு இலவச சைக்கிள் வழங்கும் திட்டம்-தமிழக அரசு அறிவிப்பு
சென்னை: தமிழக அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிலும் மாணவ, மாணவியரின் போக்குவரத்திற்கு பயன்படும் வகையில், இலவச சைக்கிள் வழங்கும் திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
தொழில் திறன் பெற்ற மனித வளத்தை உருவாக்குவதற்காக, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொழிற்பயிற்சி நிலையங்கள் அரசால் துவங்கப்பட்டுள்ளன. இந்த தொழிற்பயிற்சி நிலையங்களில் பொருளாதாரத்தில் பின் தங்கிய ஏழை, எளிய குடும்பங்களை சேர்ந்த மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்.
அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிலும் மாணவ, மாணவியர்களில் பெரும்பாலோர் பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் உள்ளவர்கள் என்பதால், தொலைவில் உள்ள தொழிற்பயிற்சி நிலையங்களுக்கு, இல்லங்களில் இருந்து வந்து செல்வதற்கு வசதியாக பள்ளி மாணவ, மாணவிகளைப் போல இவர்களுக்கும் இலவச சைக்கிள் வழங்க தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இதற்காக ரூ.6 கோடியே 36 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து முதல்வர் ஆணையிட்டுள்ளார். இதன்மூலம் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் படித்து வரும் 21,925 மாணவ, மாணவியர் பயன் பெறுவர்.
அரசின் இந்த நடவடிக்கை தொழிற்பயிற்சி நிலையங்களில் அதிக அளவு மாணவ மாணவியர்கள் சேர்ந்து படிக்கவும், வருங்காலத்தில் தொழிற்திறன் வாய்ந்த மனிதவளம் உருவாவதற்கும் அடித்தளமாக அமையும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications