பிலிப்பைன்ஸில் 14 மாதங்களாக பிணைக் கைதியாக இருந்த இந்தியர் விடுதலை
மனீலா: பிலிப்பைன்ஸ் நாட்டில் தீவிரவாத அமைப்பினரால் கடத்தப்பட்டு, கடந்த 14 மாதங்களாக பிணைக் கைதியாக இருந்த இந்தியர் இன்று காலையில் விடுவிக்கப்பட்டார்.
கேரளா மாநிலத்தை சேர்ந்தவர் பிஜூ கொலரவீட்டில்(36). குவைத்தில் உள்ள பிரன்ஸ் அல் தவூஸ் என்ற ஏற்றுமதி நிறுவனத்தின் பிலிப்பைன்ஸ் நாட்டு கிளையில் மேலாளராக பணியாற்றி வந்தார்.
இந்த நிலையில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 22ம் தேதி சூலு மாகாணத்தில் டெம்பார்க் என்ற கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டில் இருந்த பிஜூவை, அபு சையப் என்ற தீவிரவாத கும்பலை சேர்ந்த சிலர் துப்பாக்கி காட்டி மிரட்டி கடத்தி சென்றனர்.
அதன்பிறகு அவரை குறித்து எந்த தகவலும் இல்லாமல் இருந்தது. கடந்த 14 மாதங்களுக்கு பிணைக் கைதியாக இருந்த பிஜூ இன்று அதிகாலை 2.30 மணிக்கு விடுவிக்கப்பட்டார். அதன்பிறகு கேரளாவில் உள்ள தனது உறவினர்களுடன், அவர் போனில் பேசியுள்ளார்.
அப்போது அவர், தற்போது பிலிப்பைன்ஸ் காவல் துறையின் பாதுகாப்பில் இருப்பதாக தெரிவித்ததாக, பிஜூவின் உறவினர்கள் தெரிவித்தனர். பிஜூவை பிணைக் கைதியாக வைத்திருந்த அபு சையப் என்ற தீவிரவாத கும்பல், அல்-கொய்தாவுடன் தொடர்புடையது ஆகும்.
இந்த கும்பல் ஆள்கடத்தல், குண்டுவெடிப்பு, கொலை போன்ற சம்பவங்களில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்காவின் தீவிரவாத இயக்கங்களின் பட்டியலில் அபு சையப் கும்பலும் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.