ஒரு ஈமு கோழியை 16 மாதங்கள் வளர்த்தால் ரூ.2,750 தான் லாபம் கிடைக்கும்- உண்மை நிலவரம்!
ஈமு கோழி வளர்ப்பில் ஒரு கோழிக்கு எவ்வளவு வருமானம் கிடைக்கும் என்பது குறித்து, கால்நடைப் பல்கலை கழகப் பேராசிரியர் மற்றும் தேனி உழவர் பயிற்சி மைய தலைவர் பீர்முகமது கூறியதாவது,
ஈமு முட்டையிடும் கோழி அல்ல. ஒரு ஈமுக் கோழியை 16 மாதம் வளர்த்து விற்பனை செய்தால், அதன் மூலம் சுமார் 2 ஆயிரம் முதல் 3 ஆயிரம் வரை தான் லாபம் கிடைக்கும். 16 மாதம் வளர்ந்த கோழிகள் தான் விற்பனைக்கு ஏற்றவை என்று கணக்கிடப்பட்டுள்ளது. அதற்கு மேல் வளர்ந்த கோழிகளின் கறியும், கொழுப்பும் விற்பனைக்கு உகந்தது அல்ல. சுவையும் குறைவாக இருக்கும்.
16 மாதம் வளர்ந்த கோழி, சராசரியாக 40 கிலோ எடை கொண்டதாக இருக்கும். ஈமு கோழிகளைக் கறிக்காக வெட்டும் போது உயிர் எடையில் பாதி அளவு தான் கறி இருக்கும். ஒரு கிலோ கறி 350 ரூபாய் விலையில் விற்றால் 20 கிலோவுக்கு 7,000 ரூபாய் கிடைக்கும்.
அதே போல 7 கிலோ கொழுப்பு கிடைக்கும். ஒரு கிலோ கொழுப்பு ரூ.750 வீதம் ரூ.5,250 வருவாய் கிடைக்கும். தோல் ரூ.500 வி விலை போகும். ஆக மொத்தம் 16 மாதம் வளர்ந்த ஒரு ஈமு கோழியில் இருந்து ரூ.12,750 வருமானம் மட்டுமே கிடைக்கும்.
ஒரு கோழி தனது உடல் எடையைப் போல் 5 மடங்கு தீனியை உட்கொள்ளும். ஒரு கிலோ தீனி ரூ.30 விலை என்றால், 200 கிலோ தீனிக்கு சுமார் ரூ.6 ஆயிரம் செலவாகும். குஞ்சு விலை ரூ.3 ஆயிரம், பராமரிப்புச் செலவுக்கு ரூ.1,000 என்று செலவுக்கணக்கில் ரூ.10 ஆயிரம் போக, மீது ரூ.2,750 வருமானமாக கிடைக்கும். ஈமுக் கோழியில் இதை விட அதிக வருமானம் கிடைக்க வாய்ப்பில்லை என்றார்.
பீர்முகமது தனது கருத்துக்களைப் பல்வேறு மேடைகளிலும், மக்கள் மத்தியிலும் விளக்கி வருகின்றார். அவரது கருத்துக்கு பொதுமக்கள் மத்தியில் தற்போது அதிக வரவேற்பு கிடைத்துள்ளது.
ஆனால் ஈமு கோழி வளர்ப்பில் பொதுமக்கள் ரூ.பல கோடி முதலீடு செய்துள்ள நிலையில், அது மோசடி என்று போலீசாரும், வருவாய்த்துறை அதிகாரிகளும் வழக்கு பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.