பெரிய அளவிலான போராட்டம் குறித்து ராம்தேவ் இன்று அறிவிப்பு: ஊழல்வாதிகளின் பெயரை வெளியிட முடிவு
வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் கறுப்புப் பணத்தை மீட்கவும், ஊழலுக்கு எதிரான லோக்பால் மசோதாவை விரைவில் நிறைவேற்றக் கோரியும் யோகா குரு பாபா ராம்தேவ் கடந்த வியாழக்கிழமை முதல் நேற்று வரை 3 நாள் அடையாள உண்ணாவிரதம் இருந்தார். டெல்லி ராம்லீலா மைதானத்தில் இந்த உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது.
உண்ணாவிரதப் போராட்டம் முடிவதற்குள் தங்கள் கோரிக்கைகள் குறித்து அரசு என்ன நடவடிக்கை எடுக்கின்றது என்பதை அறிவிக்க வேண்டும் என்று அவர் கெடு விதித்திருந்தார். ஆனால் அரசு எந்த அறிவிப்பும் வெளியிடாததால் நேற்று தங்கள் உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டாலும் இன்னும் ராம்லீலா மைதானத்தில் தங்கி போராடி வருகின்றனர்.
அரசு தங்களின் கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ளாவிட்டால் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியிடம் முறையிடப் போவதாக அவர் அறிவித்துள்ளார். வெளிநாட்டு வங்கிகளில் கறுப்புப்பணத்தை வைத்திருப்பவர்களின் பெயர்களை இந்நாள் வரை நாங்கள் தெரிவிக்கவில்லை. ஆனால் இனிமேல் வெளியிடுவோம். எங்களின் அடுத்த கட்ட போராட்டம் குறி்தது இன்று அறிவிப்போம் என்று ராம்தேவ் தெரிவித்துள்ளார்.
தனது அடுத்த கட்டப் போராட்டம் நாடு முழுவதும் பெரிய அளவில் நடக்கும் என்று அவர் எச்சரித்துள்ளார்.