விலாஸ்ராவ் உடலுக்கு மன்மோகன்சிங்,சோனியா அஞ்சலி செலுத்தினர்
புனே: கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சென்னை மருத்துவமனையில் உயிரிழந்த மத்திய அமைச்சர் விலாஸ்ராவ் தேஷ்முக் உடல் அவரது சொந்த ஊரான மகராஷ்டிர மாநிலம் பாபால்கானுக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் விலாஸ்ராவ் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.
விலாஸ்ராவ் தேஷ்முக்கின் மனைவி வைஷாலியை கட்டிப்பிடித்து சோனியா ஆறுதல் கூறினார். விலாஸ்ராவின் மகன் அமித்துக்கு மன்மோகன்சிங் ஆறுதல் கூறினார்.
மகாராஷ்டிர மாநில ஆளுநர் சங்கரநாராயணன், முதல்வர் பிரித்விராஜ் சவான், துணை முதல்வர் அஜித் பவார், மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் மோகன் பிரகாஷ் உள்ளிட பலரும் விலாஸ்ராவுக்கு அஞ்சலி செலுத்தினர்.
முன்னதாக டெல்லியில் இன்று காங்கிரஸ் கட்சி தலைமையகத்தில் சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசியக் கொடி மட்டும் ஏற்றப்பட்டது. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தேசியக் கொடியை ஏற்றினார். ஆனால் இனிப்புகள் எதுவு வழங்கப்படவில்லை. வழக்கமாக நடத்தப்படும் கலைநிகழ்ச்சிகளும் நடத்தப்படவில்லை. விலாஸ்ராவ் தேஷ்முக்கின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.