குச்சனூர் கருப்பணசாமிக்கு 4,000 குவார்ட்டர் பாட்டில்கள் படையலிட்ட பக்தர்கள்
தேனி: குச்சனூர் சோனைக் கருப்பணசாமிக்கு 4,000 மது பாட்டில்களை படையலிட்டு பக்தர்கள் தங்கள் நேர்த்திக் கடனை செலுத்தினர்.
தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள குச்சனூரில் இருக்கும் சனீஸ்வரன் கோவிலில் சோனைக் கருப்பணசாமி கோவில் தனி சன்னதியாகவே உள்ளது. ஆடி மாதம் 4வது வாரம் முடிந்து கருப்பணசாமிக்கு பொங்கல் வைத்து நேற்று திருவிழா நடந்தது. திருவிழாவுக்கு வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமிக்கு காணிக்கையாக மது பாட்டில்களை வழங்கினர்.
பக்தர்கள் அளித்த 4,000 மதுபாட்டில்கள் சாமிக்கு படைக்கப்பட்டன. பூசாரி ஜெயபாலமுத்து தனது வாயில் துணியைக் கட்டிக் கொண்டு பூஜைகள் நடத்தினார். பின்னர் சாமி இருந்த அறைக்கதவை பூட்டிக் கொண்டு சாமி சிலையின் பின்புறமுள்ள துவாரத்தில் மதுவை ஊற்றினார். அந்த துவாரத்தில் மதுவை ஊற்றினால் அதை கருப்பணசாமி ஏற்றுக்கொள்வார் என்பது ஐதீகம்.
இந்த திருவிழாவையொட்டி சாமிக்கு 13 ஆடுகள் மற்றும் 10 சேவல்கள் பலி கொடுக்கப்பட்டன. தொடர்ந்து 2,000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு துவங்கிய விழா நள்ளிரவு 1 மணி வரை நடந்தது.












Click it and Unblock the Notifications